“ஒனக்கு இன்னாமே ஆச்சுது? நானே உயிரோட கீறேன். உனிக்கு என்ன கேடு? இந்தா, இத பட்டும் படாமலும் தட்டுமே. முக்கிடாதே."
சரோசா மெல்ல மெல்ல நகர்ந்து, துரை நீட்டிய ஈரப்பொட்டலத்தை வாங்கிக் கொண்டாள். அதற்குள் இருந்த ஊமத்தை விதைகள், அந்த வெள்ளைத் துணிக்குள் மாரியாத்தாவின் ஆயிரங்கண்கள் போல் சிமிட்டின. அதை வாங்கிக்கொண்ட சரோசா ஒரு 'தெவசாவில்' ஊற்றப்பட்டிருந்த திரவத்தின்மீது அந்தப் பொட்டலத்தை பட்டும் படாமலும் தட்டிக் கொடுக்கத்தான் போனாள். ஆனாலும், தன்னை அறியாமலே, அந்தப் பொட்டலத்தை அந்தத் திரவத்திற்குள் முக்கி முக்கி எடுத்தாள். சாதாவாக இருந்த அந்தச் சாராயம், இப்போது 'ஸ்பெஷல்' ஆகிவிட்டது. இதன் விலையும் கிக்கும் இரண்டு மடங்காம்.
சரோசா அந்த ஸ்பெஷல் சாராயத்தை இன்னொருவனுடன் சேர்ந்து கேனில் ஊற்றினாள். அப்போது கார் டிக்கியை த் திறந்த மணி ஆச்சரியம் தாங்காமல் கத்தினான்:
“துரண்ணே! இந்தண்டே வந்து பாரு. காரோட டிக்கி அசல் மாட்டுத்தொட்டி மாதிரி கீ துண்ணே. டயர் கியர் எதுவுமில்லாமே சதுரமா அசல் தரை மாதிரி இருக்குதுண்ணே."
"அடப்போடா எட்டன். அண்ணாத்தைக்கு டிக்கிய தொட்டியாக்குற ஐடியாவ கொடுத்ததே நானுதான்டா."
"சரக்கு எங்கண்ணே போகுது?"
"எங்கே போனால் உனக்கு என்னடா கயிதே?"
“ஏண்ணே இப்படி லொள்ளு லொள்ளுனு கத்தறே?"
"பின்னே இன்னாடா... அண்ணாத்தே, சர்க்கார் லைசன்சுல ஓடுற ஒயின் சாப் அல்லாத்திலேயும் விஸ்கி, பிராந்தி, ரம் இருக்கவேண்டிய பாட்டல்ல இந்த சரக்க ஊத்தி விக்கிறார்ன்னு டமாரம் அடிக்க முடியுமா? கம்மனாட்டி; என் வாயை கிளறிட்டான் பாரு."