‘அதனாலதான் இப்போ பார்ல குடிக்கிறவங்க எல்லாம் மார்ல கை வைக்காங்களா?"
"ஏய் சரோ, கார்ல ஏத்தேமே.”
சரோசா, அந்தக் கேனை தூக்கப்போனபோது, செட்டில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ராக்கப்பன் அங்கே வந்து கீழே மண்டியிட்டு, அந்த கேன் மூடியைத் திறந்து, கையை அதற்குக் கீழே வைத்துக்கொண்டு கேனை கவிழ்த்துக் கொஞ்சம் குடித்தான். சரோசா அவனைக் குப்புறத் தள்ளினாள். கையை ஓங்கப்போனவள்... பின்னர் அதே கையால், ஒவ்வொரு கேனாகத் தூக்கிக்கொண்டு போய் கார் டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவையும் இளங்கோ, அவளை வழிமறிப்பதுபோல் இருந்தது. ருக்கு, அவளை பின் பக்கமாய்ப் பிடித்துத் தன் பக்கம் இழுப்பது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் ராக்கப்பன் கூப்பாடு போட்டான் :
"அய்யோ, என் கண்ணு பூட்டே! வயிறு எரியுதே! அய்யய்யோ என் கண்ணு! அய்யோ என் வயிறு!”
எல்லோரும் அவன் பக்கமாக ஓடி வந்தார்கள். அவன் தரையில் சுருண்டு சுருண்டு நெளிந்தான். மேற்கொண்டு கத்த முடியாமல் வாய் கோணியது... கைகால்கள் வெட்டின. கழுத்து பின்பக்கமாய் திரும்பப் போனது... எல்லோருக்கும் புரிந்துவிட்டது. துரை கத்தினான்; சரோசாவை அடிக்கப்போவது போல் கைகளை ஓங்கிக்கொண்டு அதே சமயம் அந்தக் கைகளை அவள் தலையில் இறக்காமல் சத்தம் போட்டான் :
“நான் நெனச்சபடியே, அந்தப் பொட்டலத்த முக்கி முக்கி விஷச் சாராயமா ஆக்கிட்டியமே... தோ பார்! அந்தப் பொட்டலம் ஈரமா நனஞ்சிருக்கு பார். நீயல்லாம் ஒரு தொழில்காரியா? இப்போ இவன் குடும்பத்துக்கு யார் ஜவாப்பு?"
சரோசா திருப்பிக் கத்தினாள்:
"நானு மொத்துனதுல விஷமாகல. அதோ அந்த ஓணா மூஞ்சி விஷத்துல இரண்டு துளிய ஊத்துறதுக்குப் பதிலா சொட்டுச் சொட்டா ஊத்துனான். அப்பவே எனிக்கு சந்தேகம்.”