ஜாடியால் மூடிக்கிடந்தது. இந்த மூன்று பானைகளுக்கும் இடையே உள்ள, இடைவெளி மண்ணால் பூசப்பட்டு, அவற்றிற்கு ஒரே பானைபோல் ஒரு தோற்றத்தைக் கொடுத்தது.
துரை, பத்தடி தள்ளி, ஒரு நாற்காலியில் சோர்ந்து கிடந்தான். அங்கே காய்ச்சப்படுவதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், கண்மூடிக்கிடந்தான். ஆனால் அம்மைத் தழும்பனான கோபால், அவனுடைய கூட்டாளிகளான இன்னாசி, மணி, மொட்டை, ராக்கப்பன், சந்திரன் போன்ற வகையறாக்கள் அங்கும் இங்குமாகச் சுழன்றார்கள். சரோசா, தனது இஷ்டத்துக்கு விரோதமாக நிற்பவள் போல், அந்த வாகை மரத்தில் சாய்ந்து, அருகே உள்ள ஆழ்கடலையும் மேலே ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அடுப்புத்தீ, நட்சத்திரப் பொறிகளாக மேலோங்கி மேலோங்கி, ஊறல் பானையின் அடிவாரத்தையே திரவமாக்கப்போவது போல் எரிந்தது. 'சடசட' என்ற நெருப்புச் சத்தம். அதன் சினப்பொறிகள் ஓலைத்துகள்களோடு உரசி, உரசி அங்கும் இங்குமாய் நாட்டியம் ஆடின. ஆகாயமும், பூமியுமாய் ஒரே சமயத்தில் தாவுவது போல் தோன்றின. அடுப்புப் போட்ட கத்தல், எதிரே ஆர்ப்பரித்த கடலுக்கு ஜால்ரா போடுவது போல் இருந்தது.
இந்தப் பின்னணியில், ரத்தச் சதைபோலான தாழிப்பானையின் அடிவாரச்சூடு தாங்கமுடியாது, ஆவியான ஊறல், அடுத்த பானைக்குள் புகுந்து அதற்கு மேலே தாவி, முதல் பானையின் ஈரக்கசிவான அடிவாரத்தில் மேகமண்டலமாகி,பின்னர் தலைக்காவிரி போல் மெல்லியத் துளிகளாகி, அந்தப் பானையின் அடிவாரத்தில் பிறப்பெடுத்து; அலுமினியப் பாத்திரத்தில் விழுந்து கர்ப்பக்குழாய் மாதிரியான ரப்பர் குழாய் வழியாய் சாராய காவிரியாகி, அந்த கேன் கடலுக்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தது.
துரை, சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு முடங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், இருந்த இடத்தில் இருந்தபடியே அதட்டினான்:
"இன்னாங்கடா, ஒரு அவுரு ஆவுது, வேடிக்கை காட்டுறீங்க."
‘குருதோஸ்து'வின் சிக்னலைப் புரிந்து கொண்ட இன்னாசி, மேல் பானையை டவலைக் கொடுத்துத் தூக்கிய பொழுது, கோபால் அடுப்பு விறகை சிறிது வெளியே எடுத்தான். இதற்குள்,