"வாணாண்டா! அண்ணன், நோவடிக்கொடுங்கோ, சாவடி வேண்டாம்னு சொன்னது தெரியாதா? அவர் அப்படிச் சொன்னா அதுல ஏதாவது அர்த்தமிருக்கும்.”
அனைவரும் இளங்கோவை அந்தப் புதர்ச் செடியிலேயே போட்டுவிட்டு, வீரியமாய் நடந்தார்கள். வேர்வையை துடைத்தபடி, நின்று, நிதானமாகப் போனார்கள். ஒருவன் இளங்கோவை நோக்கி மீண்டும் ஓடிவரப் போனான். சகாக்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். இப்போது அவர்களுக்கு நேரமில்லை. சேட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்ட இப்பவே கொஞ்சம் சாராயத்தைக் குடிக்க வேண்டும்.
இளங்கோ, மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்தது போல் முட்படுக்கையில் கிடந்தான். வாயில் ஒருபக்கம் வெள்ளை வெள்ளையான நுரை. மறுபக்கம் சிவப்புச் சிவப்பான ரத்தம். நடுவில் வெள்ளையும், சிவப்பும் கூட்டணி கொண்ட கலவை. நெற்றிப் பொட்டில் பெரிய பள்ளம். அந்தப் பள்ளத்தில் ரத்த ஊற்று. ஒரு கை . அசைவற்றுக் கிடந்தது. இன்னொரு கை அங்குமிங்குமாய் ஆடியது. கால் பாதங்கள் ரத்தச் சேற்றில் நனைந்து கொண்டிருந்தன. துணியை அடித்துத் துவைத்துப் பிழியாமல் காயப்போட்டது போன்ற தோற்றம். அவனுக்கு ஏற்பட்ட அக்கிரமம் தாங்க முடியாதது போல் ஒரு ஆமணக்குச் செடி கடற்கரைக் காற்றில் ஆடி அவன் முகத்தை வருடிவிட்டது. அருகேயுள்ள எருக்கலைச் செடிகள் வெள்ளை பல்பு மாதிரி பூக்களைக் காட்டியபடி ஒப்பாரியிட்டன. அவனோ பேச்சற்று, மூச்சற்றுக் கிடந்தான்.
அவன் மயக்கமாய் கிடந்த புதர்ப்பக்கமாய் வந்து போன ஸ்கூட்டர்கள் திரும்பிப் போயின. சிறிது தூரம் கடந்துபோய் வேடிக்கையாய் நின்றன. சில கார்கள் இதெல்லாம் சகஜம் என்பதுபோல் சகஜமாய் ஓடின. சில சைக்கிள்காரர்கள் "இந்தாங்கப்பா" என்று சொல்லிவிட்டு நின்றபோது, அடித்தவர்கள் திரும்பிப் பார்த்து, "போயிக்கினே இருய்யா” என்று மிரட்டியதும், உருளைச்சக்கரங்களோடு ஓடிவிட்டார்கள். அந்தப் பக்கமாய் போன 'கால்நடை' மனிதர்கள், அவன் குடித்துவிட்டுக் கிடப்பதாய் நினைத்து "இந்த மாதிரி ஆட்கள் இப்படித்தான் கிடக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டே போனார்கள். அருகேயிருந்த பலமாடிக் கட்டிடங்களில் ஆண்களும், பெண்களும் வெளியே பால்கனிகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்கள். ஒரு கால் கூட, கீழே இறங்கவில்லை.
இளங்கோ மெள்ளமெள்ளச் செத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. காகங்கள், அவன்