(Reading time: 22 - 43 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

கும்பலானார்களே தவிர, அந்த ‘உதைக் களத்தை' நெருங்கவில்லை. வேடிக்கை பார்ப்பதுபோல் போன கார்களை, பின்னிருக்கை மனிதர்கள், முன்னிருக்கை டிரைவர்களின் முதுகுகளைத் தட்டி அவசரப்படுத்தினார்கள். பல பெட்டிக் கடைகள் மூடப்பட்டன. சில்லரைக் கடைக்காரர்கள் எதிர்ப்பக்கம் குனிந்து கொண்டார்கள். சில கடைகள் எதுவுமே நடக்காதது போல் அப்படியே திறந்திருந்தன. வீட்டு வேலைகளுக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், விசனத்தோடு நின்றார்களே தவிர, அந்த அடாவடியை தட்டிக் கேட்கவில்லை. தொலை தூரத்து வீடுகளிலும் உன்னிப்பான இரண்டு கால் கூட்டங்கள். இதற்கள் “ஏண்டா வேடிக்கை பார்க்கிறீங்கோ? போங்களேண்டா சோமாறிங்களா, சோதாப்பசங்களா” என்று இளங்கோவை அடித்தவர்களில் ஒருவன் இளைப்பாறும் வகையில் எகிறியபோது, நெருங்கி நின்ற ஒரு சின்னக் கூட்டமும் சின்னா பின்னமாகியது.

   

ஆட்டோக்களும், கார்களும், ஆங்காங்கே மனித நடமாட்டமும் மொய்த்த கடற்கதைச் சாலைக்கு அருகேயுள்ள புதர்ப் பகுதியை நோக்கி அவனை காலால் எத்தியெத்தி உதைத்துதைத்து, கால்பந்தை அடிப்பதுபோல் அடித்துக் கொண்டே போனார்கள். பிறகு அவனை தூக்கி நிறுத்தி, அவன் கைகளை இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, பின்னால் இரண்டு பேர் முதுகில் காலாலும் கையாலும் எகிற, அவனை புதர்ப் பகுதிக்குக் கொண்டு வந்தனர். கருவேல மரச்செடிகள் கொண்ட அந்தப் புதரில் அவனைக் குப்புறத்தள்ளினார்கள். அவன் உடலெங்கும் முட்கள் ஊடுருவின. ஒரு முட்கிளை அவன் வாய்க்குள் புகுந்து பற்களுக்குள் ஊடுருவி நாக்கைத் துளை போட்டது. அப்படியும் விடாமல் அந்தப் ‘போராளிகள்' அவனை பின்பக்க சட்டைக் காலரை கழுத்தோடு சேர்த்துப் பிடித்திழுத்தார்கள். ஒருவன், அவன் தலைமுடியை பிடித்துப் பிடித்து ஆட்டியபோது இன்னொருத்தன் அவனை முட்டிக்கு முட்டி வாங்கினான். போலீசாரிடம் இப்படி சில சமயம் வாங்கிக் கொண்ட அவர்கள், அதே விகிதாச்சாரத்தில் அவனுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். அடிக்கு அடி 'சோமாரி, சோதா' என்ற வார்த்தைகள். 'டேய், டாய்' என்ற பிளிறல்கள். எழுதமுடியாத கெட்டகெட்ட வார்த்தைகள். இளங்கோ மூச்சற்று, முனங்கலற்றுக் கிடந்தபோது, ஒருத்தன் அவன் கை கடிகாரத்தைக் கழற்றிக் கொண்டான். டவுசர் பையன் அவன் சட்டைப்பையை கிழிக்கப் போனான். முடியாமல் போனதால், இளங்கோவின் வயிற்றில் காலைப்போட்டு அதை ஆதாரமாக்கிக் கொண்டு, சட்டைப்பையை இழுத்து, அதற்குள் இருந்த ரூபாய் நோட்டுகளைச் சுருட்டி காதில் வைத்துக்கொண்டு, கால்களை எடுத்தான். இன்னொருத்தன் உருட்டைக்கம்பால் அவன் தலைக்குக் குறிபார்த்தபோது, ஒருத்தன் உஷார்படுத்தினான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.