(Reading time: 22 - 43 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

போனால் அந்தம்மா இருக்காங்களோ மாட்டாங்களோ, அதுக்கு வாச்சிருக்கிற பொண்ணு செத்தாக்கூட அழத்தெரியாத மடச்சாம்பிராணி. முதல்ல, இதக் காப்பாத்தணும். அப்பால மற்றத பாத்துக்கலாம்!'

   

ருக்குமணி, அந்த வேன்வாசிகள் கேட்கும் முன்பே நடந்தவற்றை கோபாவேசமாகக் கண்களைக் கசக்கிக்கொண்டும், இடையிடையே திணறிக்கொண்டும், இதற்குக் காரணமான குப்பத்துக்காரியை வாய்க்கு வந்தபடி வைதுகொண்டும் விளக்கிக் கொண்டிருந்தாள். அதோடு, தனது பையன் எப்படிப் பெரிய போலீஸ் அதிகாரி முன்பு சமர்த்தாக நின்றான் என்பதையும் லேசாகச் சொல்லி வைத்தாள். பிறகு, அவர்களுடைய கதையையும் கேட்க வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வி கேட்டாள்:

   

"ஆமா, பத்து மணிக்குள்ளே காய்கறி வேனுங்க வந்துடும். நீங்க ஏன் லேட்டு?"

   

ஒரு பழக்காரம்மா தனது முகத்தை அழுகிய பழம் போல் ஆக்கிக்கொண்டு பதில் சொல்லப் போனபோது, கடிகாரம் கட்டிய லுங்கிக்காரன் முந்திக்கொண்டான் :

   

“அத ஏன் கேக்குற? அநியாயம் அக்கிரமம்... என்னோட விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து இப்படி கூத்து நடக்கிறது தெரிஞ்ச கத தான். ஆனா, இப்போ நடக்குறதோ தாங்க முடியாத கூத்து. இன்னிக்கிக் கோட்டையில சர்வகட்சி தலைவர்களோட கூட்டமாம். தலைவருங்க .வாராங்கன்னு போலீஸ்காரங்க எங்கள தலையெடுக்கவிடாமப் பண்ணுறாங்க. பாரிமுனையில ஒன்பது மணிக்குப் புறப்பட்ட இந்த வேனை, பாலத்துக்குப் பக்கத்துல ஒருமணி நேரமா காக்கப் போட்டாங்க. அப்புறம் ஒருத்தரு கோட்ட ஸ்டேஷனுக்குப் போற பாலம் வழியா போகச் சொன்னாரு. பல் ஆஸ்பத்திரிக்கிட்ட வந்தப்போ ஒரு போலீஸ் ரைட்டுல போகச் சொன்னாருன்னு வேனை விட்டோம். அந்தப் பக்கம் நின்ன இன்னொருத்தர் லெப்டுல போகச் சொன்னாருன்னு வேனை ஒடிச்சோம். லெப்டு போலீசும் திட்டுது, ரைட்டு போலீசும் திட்டுது. நடுவில் வந்தா இன்னொரு போலீசும் டிரைவரை அடிக்க வருது... பதில் சொல்றதை, எதிர்த்துப் பேசுறதாய் நினைத்து. மூணுமணி நேரமா காஞ்ச கருவாடாப் பூட்டோம். அய்யோ, ஏழபாழன்னா இந்தப் போலீஸ்காரங்க குதிக்கிற குதி..."

   

"எய்தவன் இருக்கப்போ, அம்ப நோகறதுல என்ன பிரயோசனம்?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.