"யோவ் டாக்டரு! நீயெல்லாம் ஒரு டாக்டரா? பேசாம கழுத்துல கிடக்கிற ஸ்டெதாஸ்- கோப்புலயே தூக்குப் போட்டுச் சாகவேண்டிய ஆளு நீ."
அந்த வேன் துள்ளிக்குதித்து ஓடியது. பெரும்பாலான சாலைகளில் ரக்கைக் கட்டாமலேயே பறந்தது. இருபத்திநான்கு மணிநேர கிளினிக்குகளும், அரிமா சங்கங்கள் நடத்தும் சமூகசேவை மருத்துவமனைகளும் வழியடைத்தன. பெரிய பெரிய மருத்துவ மனைகளை நெருங்குவதற்கு இந்த வேனுக்கு பயம். "இதற்கு மேலும் வண்டியை ஓட்ட டீசல் இல்லை” என்று டிரைவர் உள்ளேயிருந்து கத்தினார். இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ருக்குமணியைப் பார்த்தபோது அவளுக்குத் தோழியாகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டவள் “அந்தண்ட நிறுத்துங்க” என்றாள். அவள் சொன்ன இடத்தில் ஒரு பாடாவதி மருத்துவமனை.
ருக்குமணியும் அந்தப் பெண்ணும் காய்கறிக்காரர்கள் தூக்கிக் கொடுத்த இளங்கோவை தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு அவனை தங்களது தோள்களில் போட்டபடியே அந்த மருத்துவமனையின் ஒரு கல் தூணில் சாய்த்தார்கள். ருக்குமணி அவளைப் பார்த்து சேர்க்காட்டா" என்றாள். உடனே அந்தப் பெண் "சேர்க்க வைக்கிறேன் பார்" என்றாள். இதற்குள் ஒய்யாரமான மூன்று நாற்காலிகளில் ஒரு தலை மேலே தென்பட்டது. வரவேற்புப் பெண் கத்தினாள் :
"என்ன வேணும்? போங்கப் போங்க! இதென்ன சத்திரமா, சாவடியா?"
அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அவளுக்கு அருகேயுள்ள நாற்காலியில் உட்கார்ந்து ஆர்ச் மாதிரி இருந்த மேசையில் தலையைப் போட்டுக்கொண்டிருந்த ஒரு முப்பது வயத ஆசாமி நிமிர்ந்தான்.அவனுக்கு சிகிச்சையளிக்கவே ஒரு முழு மருத்துவமனை தேவை. அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு அவள் பக்கமாக வந்தான்:
"அடேடே, நீயா? என்னம்மா விஷயம்? யார் இது?"
"ஸ்பெஷல் இருக்குண்ணே. ஒனக்குன்னு நாலு கிளாச எடுத்து வச்சிருக்கேன்."