இளங்கோவை கீழே இறக்கப் போனபோது, அந்த மருத்துவமனையின் முகப்பில் நின்ற காரில் ஏறப்போன ஒரு ஸ்டெதாஸ்கோப் மனிதர், அங்கே வந்தார். அவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரே வெளியே வந்தார். பணக்காரர்களுக்கு காலில் ஒரு முள் குத்தினாலும் அவர்களைப் படுக்க வைத்து ரத்தப் பரிசோதனை, சிறுநீர் சோதனை, எச்சில் சோதனை, எக்ஸ்ரே, தேவைப்பட்டால் ஸ்கேனிங் என்று முள்ளை எடுப்பதற்குப் பதிலாக அந்த முள்ளை காலிலிருந்த கண்ணுக்குள் தள்ளிவிட்டு விடும் அந்த டாக்டருக்கு அந்த அன்னக்காவடிகளின் கையிலிருந்த கேஸ் தேறாதது போல் தோன்றியது. கேஸ் தேறினாலும் 'காஷ்' தேறாது. அவர் கத்தினார்:
"என்னய்யா வேணும் உங்களுக்கு?"
"இவருக்குக் காயம், ஆக்சிடென்ட், இல்லயில்ல... அடிபட்டுட்டு... தப்பு தப்பு. அடிச்சிட்டாங்க."
"போலீசுக்குக் கொண்டுபோக வேண்டிய கேச எதக்குய்யா ஆசுபத்திரிக்கி கொண்டு வறீங்க? இவர இங்க சேர்த்துட்டு, நானும் கோர்ட்டு கோர்ட்டா அலையணுமா? இவர நீங்களே அடித்துக் கொண்டு வந்திருக்கு மாட்டீங்க என்கிறது என்ன நிச்சயம்? போலீசுக்குப் போய் அப்புறமா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ."
"அது எங்களுக்குத் தெரியும்.”
"தெரிஞ்ச பிறகும் இங்க எதுக்கு வந்தீங்க?”
"வேன்ல வந்தா இப்படிப் பேசிடுவீங்க. ஏர்-கண்டிஷன் கார்ல வந்தா இப்படிப் பேசுவீங்களா?”
"யோவ், மரியாதையா போறீங்களா, இல்ல நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்யவா?”
“அந்த வியாபார டாக்டர் அப்படிச் செய்தாலும் செய்வார் என்று பயந்துபோன வேன்காரர்கள், இளங்கோவைத் தூக்கி பழையபடியும் கத்தரிக்காய் மூலையில் கிடத்தினார்கள். ஆனாலும், அந்தக் கடிகார லுங்கிக்காரனுக்கு மனம் கேட்கவில்லை. கோபம் அடங்கவில்லை. வேன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தபோதே அவன் கத்தினான் :