"சித்த நேரத்துலவந்துடறேன். டாக்டர் ரவுண்டு முடியட்டும்."
"அப்புறம் அண்ணே.. இது பெரிய இடத்துப் பிள்ளாண்டான். எப்படியோ ஏடாகூடமா நடந்துட்டு. நீதாண்ணே இங்கசேக்கணும்.”
“அதெப்படி, நான் என்ன டாக்டரா?"
"இந்தாண்ணே ஐம்பது கொடுக்கணும்னா கொடுத்து..."
"சரி, ஓசப்படாம நில்லு. ரூம் ரெடி பண்ணிட்டு, கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்துட்டு வாறேன்.”
அந்த நோஞ்சான் பேர்வழி தூணில் சாய்த்து வைக்கப்பட்ட நோயாளியை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். அந்த ஐம்பது ரூபாயும் அவனுக்குத்தான் என்பது அவளுக்கும் தெரியும். ஆனாலும் அவன் சுயமரியாதையை குந்தகப்படுத்தாமல் பேசியதில் அவளே பெருமைப்பட்டாள். 'அடடே... எனிக்கிக்கூட புத்தியிருக்கே...
இதற்குள் ஐந்து நிமிடத்தில் அந்த ஆசாமி கீழே வந்துவிட்டான். அவன் பின்னால், இரண்டு பையன்கள் ஸ்டெச்சரோடு வந்தார்கள். அவர்கள் இளங்கோவை அந்த ஸ்டெச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆசாமி சரோசாவிடம் சாவகாசமாகப் பேசினான் :
"இந்த நர்சிங்ஹோமில் கிரவுண்டுல ரூம் கிடையாது. மாடியிலதான் பேஷன்ட் பார்க்கிறாங்க. யாராவது ஹார்ட் பேஷன்ட்டா இருந்தா அவங்களையும் ஸ்டெச்சர்ல தூக்கிக்கிட்டு மாடிப்படி வழியா நடந்து போகணும். அப்பவே அந்த ஆசாமி டொக்குனு போயிடுவான். லிப்ட் இல்லாம நர்சிங்ஹோம் மாடி இருக்கக் கூடாதுங்கிறது சட்டம். ஆனால் இந்தக் காலத்துல சட்டமா பேசுது? காசில்லா பேசுது? அப்புறம் சரோசா, அந்த ஸ்பெஷல் இருக்குமா இல்ல வேற யாராவது..?"
"ஒனக்குன்னு வெச்சத ஒனக்குத் தாரேண்ணே. சும்மா ‘கும்’முன்னு இருக்கும். அப்புறண்ணே, இந்தப் பிள்ளாண்டான நல்லாக் கவனிக்கணுமுண்ணே.”