உடம்புக்கு மேலே ஆகாயத்தில் மொய்த்தன. அவனைக் கொத்தித் தின்பதற்காக சில ஆங்காங்கே உட்கார்ந்தன. பிறகு அவன் ஈன முனங்கலாய் முனங்குவதைப் பார்த்துவிட்டு, அது அடங்குவதற்காகக் காத்திருந்தன.
அந்தப் பக்கமாய் பூக் கூடையில்லாமல் தலைவிரி கோலமாய் வந்த ருக்குமணி, அப்படியே வாய் பிளந்து நின்றாள். அவன் இளங்கோதானா என்பதுபோல் கிட்டே நெருங்கிப் போனாள். பிறகு "அய்யய்யோ... அய்யய்யோ..." என்று அரற்றினாள். அங்குமிங்குமாய் சுற்றி, அவன் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தாள். கை லேசாய் சுட்டது போலிருந்தது. அருகே பலமாடிக் குடியிருப்புகளில் பால்கனிகள் மேல் திடீர் அவதாரம் எடுத்தவர்களை நோக்கி, கைகளை ஆட்டி 'வாங்கோ... வாங்கோ' என்று சமிக்ஞை செய்தாள். அந்தத் தலைகள் உடனே மறைந்தன. அந்தச் சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனக்காரர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவர்கள் லாகவமாக ஒதுங்கிக்கொண்டார்கள். சில கார்க்காரர்கள் திட்டிக்கொண்டே போனார்கள். “குடிகாரப் புருஷனுக்கா வக்காலத்து வாங்குறே?” என்று வேறு வக்கணை பேசிக்கொண்டு நிற்காமலே ஓடினார்கள்.
பூக்கார ருக்குமணிக்கு, கண்டும் காணாமல் போன அந்த யந்திர மனிதர்களின் கோழைத்தனம் தனது துணிச்சலுக்கு உரமாகி மனதுள்ளே பூத்திருக்கும் மனித நேயத்திற்கு உருவமாகியது. சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, அவன் தலையை நிமிர்த்தினாள். பிடரியில் துளைத்த முட்களை செடியோடும், கொடியோடும் ஒடித்துப் போட்டாள். ஆனாலும், பல முட்கள் அவன் உடம்பின் பல இடங்களில் கொள்ளுமாதிரி கறுப்புக்கறுப்பாய் கண் சிமிட்டின. ஒரு சப்பாத்திக்கள்ளி முள், செருப்புப் போடாத தனது கால்களைத் துளைப்பதையும் பொருட்படுத்தாது ருக்குமணி அவனை தூக்கப் போனாள். சப்பாத்தி முள்ளால் கால் துடித்தது. அதை எடுப்பதற்குக் குனித்தாள். அப்படிக் குனிந்தால் அவனை அப்படியே மீண்டும் புதர்ச் செடியில் மல்லாக்க வீழ்த்த வேண்டும். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள். சப்பாத்திமுள்ளின் கோரப் பற்களில் காலை குடியேற்றிக் கொண்டே, இளங்கோவை தன் பக்கமாய் இழுத்து, அருகில் உள்ள மணற்பரப்பில் போட்டாள். தொலைவில் ஒரு கூட்டம் தென்பட்டது. தலையில் கூடைகளோடு வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்திற்காக, அவள் காத்திருந்தாள்.
ருக்குமணி, 'டப்டப்' என்ற சத்தம் கேட்டுத் திரும்பினாள்.