நாதியில்லாம போயிட்டேண்ணா.''
அண்ணன், சரோசாவின் பக்கம் போகப்போனர். பிறகு அது தனது தகுதிக்குக் குறைவு என்பதுபோல் அவளை தன்பக்கம் வரும்படி கையாட்டினார். அவள் வந்ததும், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே ஆறுதல் சொன்னார்:
“நீ சொல்லிட்டே... நான் சொல்லல. அந்தச் சமயம் பார்த்து அண்ணன்வேற ஆந்திராவுக்கு அரசியல் விஷயமாய் போயிட்டேன். இந்த சோமாரி துரை, ஒரு டெலிபோன்ல எனக்குச் சொல்லி யிருக்கலாம். அனுமார் சஞ்சீவி மலைய தூக்கிக்கிட்டுப் போனதுமாதிரி நீ இருந்த போலீஸ் ஸ்டேஷனையே தூக்கிக்கிட்டு வந்து ஒடைச்சிருப்பேன். இப்பவும் குடிமூழ்கிடல. ஸ்டேஷன்ல ஒன்ன எந்தெந்தப் பசங்க ஒதச்சாங்களோ அவங்க நம்பர்ங்களை என்கிட்டக் குடு... அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு. ஏண்டா துரை ஒன் பொண்டாட்டிய போலீசுல இப்படி கூட்டிக்கிட்டுப் போய் ஒதுச்சா நீ சும்மா இருப்பியாடா கயிதே, கயிதே. சரோசா நம்மப் பொண்ணுடா.'
கையாட்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டு மூச்சிறைக்க அங்கு வந்த துரை, அண்ணனை பயந்து பார்த்தான். அவன் சிந்தனையெல்லாம் அண்ணனை சம்சாரம் பார்க்கிறாளா என்பதில்தான் இருந்தது. அந்தக் கணக்கில், சரோசா கணக்கைக் கழித்துவிட்டான்.
அண்ணன், அதட்டலோடு பார்த்தபோது, துரை பேச்சை மாற்றினான். லாக்கப்பிலிருந்த சரோசாவை தான் மீட்பதற்குப் புறப்பட்டபோது தனக்குன்னு வாய்ச்சவள் 'போகாதே போகாதே என் கணவா' என்று தன்னை அழவைத்துப் பேசியதை அண்ணனிடம் எப்படிச் சொல்வது? ஆகையால் அவன் பேச்சை மாற்றினான்.
"ரெய்டு வராங்கன்னு சொல்றாங்கண்ணே!”
"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு எட்டணா என்கிற கதையில பேசுறீயே? என்ன சரோசா! ஏதோ எங்கிட்ட சொல்லணும்போல நிக்கிறே?”
"ஆமாண்ணே... என்ன போலீசுல பிடிச்சுக்கொடுத்த ஒரு பிள்ளாண்டான் ரோதனை