மகிழ்ச்சி.
சரோசா கையில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் தயங்கியபடியே நீட்டினாள். பலர் இப்படி அவனுக்குக் கொடுப்பதை தொலைவில் நின்று பார்த்த அவளுக்கு, நோயாளிகளுக்கு இப்படி பழவகைகளைக் கொடுக்க வேண்டும் என்பது இப்போதுதான் புரிந்திருக்க வேண்டும். அவனுக்கு ஏதோ ஒரு டெலிபோன் வந்தது. யாரோ அலுவலக ஆசாமி. இவனும் “தேங்க்யூ ஸார்..தேங்க்யூ ஸார்... உடம்பை ஜாக்கிரதையாகத்தான் பாத்துக்கறேன் ஸார்; இனிமேல் கண்டபடி வண்டியை ஓட்டமாட்டேன் ஸார்” என்று அவன் அப்படிக் குழைந்து பேசியதைப் பார்த்தால் டெலிபோனில் அடுத்த முனையில் பெரிய அதிகாரி ஒருவர் பேசியிருக்க வேண்டும். டெலி போனை கீழே வைத்துவிட்ட அவன், சரோசாவைப் பார்த்தான். அவளது ஈரப்பட்ட முகத்தைப் பார்த்தபடியே ஒரு சந்தேகம் கேட்டான்: "ஆமா சரோ, நானும் உன்னை கவனிச்சுட்டுத்தான் வரேன். இங்கே ஆளுங்க வரும்போதும் போகும்போதும் கண்ணை கசக்குறயே, ஏம்மா?”
சரோசா அவனை சங்கடத்துடன் பார்த்தாள். பிறகு அவனிடமே ஆலோசனை கேட்பதுபோல் ஒப்பித்தாள் :
"கண்ணை கசக்கலே சாரே; கண்ணே கசங்குது! அதென்னமோ எனிக்குத் தெரியலே, இங்கமட்டுமில்லை, எங்கேயும் ரெண்டுபேரோ மூணுபேரோ அன்னியோன்யமாய் பேசிட்டிருந்தால் எனிக்கு அயுகை வந்துடும். நேத்து பாரு... இந்த கஸ்மாலம் புடிச்ச மழையிலே ஒரு பொடிப்பயலும், ஒரு பொண்ணு தன்னோட முந்தானையை எடுத்து அவன் தலையில மூடனாய். இந்த பாசத்தை பார்த்துட்டு நான் அழுதுட்டேன் சாரே. யாராவது கொயந்தைய கொஞ்சறதப் பாத்துட்டாப் போதும், அயுதுடுவேன். யாராவது ‘சொகமா இருக்கிறியானு' மெய்யாவே கேட்டாப் போதும், அயுதுடுவேன். எனக்கே ஏன் இப்படினு புரியல. எதுக்கும் ஆஸ்பத்திரி தோஸ்துக்கிட்டே சொல்லி இங்கே வார பைத்தியக்கார டாக்டரண்டே என்னையும் தோவுண்டு டெஸ்ட் பண்ணிக்கலாமுன்னு இருக்கேன். சர்தானே சாரே?”
இளங்கோ, அவளை இப்போது புதுமாதிரியாகப் பார்த்தான். அவளைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கே அழுகை வரும்போல் தோன்றியது. ஆகையால் அவள்மீது ஏவிவிட்ட பார்வையை தவிர்த்துவிட்டு, அங்குமிங்குமாய் பார்த்தான். அவளைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, அவள் கல்லுள் மறைந்த சிற்பம்போல் தோன்றினாள். அந்த தடிப்பேறிய உடம்பிற்குள் ஒரு குழந்தை