அழுது கொண்டிருப்பதுபோல் தென்பட்டது. அவளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய பிசகாத கையை ஊன்றி இருக்கையின் முனைக்கு வந்தான். அவளை உட்காரச் சொன்னான். அவளோ நின்றுகொண்டே உட்காருவதுபோல் உடம்பை வளைத்துக் கொண்டாள். இளங்கோ, அவளை அனுதாபமாய் பார்த்தபடியே கேட்டான்:
"உன்னைப் பற்றி விவரமா சொல்லேன் சரோ."
"போலீஸ் சொல்லி இருக்குமே.”
"சொல்லுச்சு. ஆனால் அந்தப் போலீசுக்கு ஒருத்தரோட காரியங்கள் தான் முக்கியமே தவிர, காரணங்கள் அல்ல. ஏழைகளை வேரோடு பிடுங்கி எறியத்தான் தெரியுமே தவிர, அவுங்களோட வேரையோ, வேரடி மண்ணையோ தெரிஞ்சுக்க மாட்டாங்க. போகட்டும்; ஒன்னைத் தேடி ஸ்டேசனுக்கு ஒரு பெரியவர் வந்தாரே, அவரு யாரு?"
சரோசா, உடனடியாகப் பேசவில்லை. கண்களை உள்நோக்கிச் செலுத்தினாள். அதை நெஞ்சுக்குள் விட்டதுபோல் இமைகளை முழுமையாகக் காட்டினாள். மனதிற்குள் மூன்று வயதுக் குழந்தையாக அழுதாள். கத்தியுடன்கூடிய கொலைகாரியாகத் தாண்டவம் ஆடினாள். பிறகு முடங்கிப் போனவள்போல்-மூலையில் கிடப்பதுபோல் பாவித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இமைகள் மெல்லத் திறந்தன. இளங்கோவை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, முதல் தடவையாக ஒரு தோழனைப் பார்க்கிற துயரமும் மகிழ்ச்சியும் கலந்த கலவைக் குரலில், தனது வாழ்க்கைச் சுருக்கத்தை சொன்னாள்:
"பெரிசா சொல்றதுக்கு எதுவுமே இல்லே-சாரே. என் நயினா, அதான் நீ சொன்னியே - ஸ்டேசனுக்கு வந்தவர் - அவரு பர்மாவுல பெரிய கில்லாடியா இருந்திருக்கார். காரு வச்சிருக்கார், பங்களா வச்சிருக்கார்; கண்ணுக்கு அயகா பொண்டாட்டி வச்சிருக்கார். ஒரு பொண்ணையும்,புள்ளாண்டானையும் பெத்திருக்கார். அப்போ ஏதோ ஒலகப் போரோ ஏதோ வந்துதாமே - அதுல சப்பான்காரன் ரங்கூன்லே குண்டு போட்டிருக்கான். உடனே எல்லாரையும் போலே நயினாவும் துண்டக் காணோம். துணியக் காணோம்னு அடிச்சுப் புரண்டு குடும்பத்தோட நம்ம நாட்டைப் பார்த்து நடந்திருக்கார். காடு மலை வழியா, சனங்களோட சனமா வந்திருக்கார். கார் வைச்ச மனுசன் காலுவீங்கி நடந்திருக்கார். காட்டு வழியிலே