இளங்கோ, சரோசாவை கண்களை ஆட்டாமல் பார்த்தான். தோள் பக்கம் நைந்துபோன அவள் ஜாக்கெட்டையும் முட்டிக் கால்களைக் காட்டிய அவளது கிழிந்த பைஜாமாவையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு மனம் நைந்தது. அவளையே உற்றுப்பார்த்தவன், பிறகு ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்ததுபோல் அவளைப் பிரகாசமாகவும், பிரகாசப் படுத்தியும் கேட்டான் :
"ஒன்னோட எதிர்காலத்தைப்பற்றி எப்பவாவது நெனச்சுப் பாத்தியா?”
"எப்போ ஒருநாள் நினைச்சேன் சாரே... தலை சுத்திச்... விட்டுட்டேன். என்னை மாதிரி குப்பத்துப் பொண்ணுங்க குப்பத்துல திரியற நாயிங்க மாதிரி. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரியாமக் கீறதுதான் எனிக்கு நல்லது. ஏதோ பண்ணி மாதிரி ஒரு பொய்ப்பு... விட்டுத் தள்ளு."
“அப்படி இல்ல சரோசா..பன்றி மிருகம்... ஆனால் நாம் மனுசன் மாதிரி. இப்போ ஒனக்கு இருபத்தோறு வயசுதான் இருக்குமுன்னு நினைக்கிறேன். எல்லோரும் இப்போ உன்னைக் கொஞ்சுவாங்க, தலையிலே வச்சுக் கூத்தாடுவாங்க. ஆனால், இன்னும் இருபது வருசத்துக்குப் பிறகு ஒன்னோட நிலைமை எப்படி இருக்குமுன்னு யோசித்தியா? அந்த மாதா கோயிலுக்கு முன்னாலே தரையோட தரையா உடம்புகளைக் கிடத்திக்கிட்டு கிடக்குதே ஒரு அனாதைப் பட்டாளம், அதுலதான் நீ போய் சேரணும். ஒன்னோட தோஸ்துங்க, உன்னை, காலால எத்துவாங்களே தவிர, ஏறிட்டுப் பார்க்க மாட்டாங்க. அவங்களோட அலட்சியத்துல நீ அல்லாடணும். பிச்சக்காரியா கையேந்தணும். கை செத்து காலு செத்து கண்கெட்ட அனாதைக் கிழவிங்களைப் பார்க்கேமே அது மாதிரி நீ ஆயிடுவே. நீ கடைசிக் காலத்துலே கை கால வெட்டிக்கிட்டு இருக்கப்போ உன்னை ஆஸ்பத்திரியிலே சேர்க்கிறதுக்குக் கூட ஒருத்தரும் வர மாட்டாங்க. நம்ம எதிரில் வருகிற ஒவ்வொரு அனாதைக் கிழவியோ, இல்ல குஷ்டரோகியோ நமக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறாங்க. என்ன தெரியுமா? 'என்னை மாதிரி ஆயிடாதேன்னு' புரியுதா?"
சரோசா, முதலில் சிரித்தாள்; பிறகு பேசாது இருந்தாள். அப்புறம் அவனை ஆழமாகப் பார்த்தாள். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு அங்குலம் வீதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இளங்கோ அனுமானித்தவைகளை நினைக்க நினைக்க, அவளுக்குத் தன்னைவிட பன்றிகளும், நாய்களும் உயர்ந்தவைகளாகத் தெரிந்தன. காரணம், அவைகளுக்கு உடல் வாதைதானே தவிர மனவாதை கிடையாதே!