(Reading time: 10 - 20 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

கூட்டத்தில் வஸ்தாவாகத் தோன்றிய ஒரு குச்சிக் கிழவனிடம் அந்த நோட்டைத் திணித்து, “அல்லாருக்கும் சில்லரை மாத்தி சரிசமமாகக் கொடு” என்றாள். சிலர் இரண்டு ரூபாய் கிடைக்கும் ஆனந்தத்தில் முகம் தூக்கினார்கள். சிலர், அந்தப் பிரக்ஞையே இல்லாமல் அப்படியே கிடந்தார்கள்.

   

சரோசா, பஸ் நிலையம் பக்கம் வந்தாள். அப்படி வரும்போது இளங்கோவை நினைத்துக் கொண்டாள். அந்தப் பிச்சைக் கூட்டத்தின் ஆனந்தத்துக்கு அவனே காரணம். இன்றைக்கு, டிஸ்சார்ஜ் ஆகப் போவதால், அவனைப் பழைய இளங்கோவாக முழுமையாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆள் இல்லாத சமயமாய் அவன் அறைக்குப் போயிருந்தாள். அவனோ, பழையபடியும் கவர்மென்ட் வேலைக்கு வரும்படி, அவளிடம் பத்துத் தடவை சொல்லியிருப்பான். இவள், 'கல்லுளி மங்கி மாதிரி' அவனுக்குப் பதில் சொல்லாமல், இறுதியில் "நாய்னா பசியில துடிப்பார். துரை அண்ணன்கிட்ட காசு வாங்கணும். அவுரு தலமறைவா ஆகுமன்னாலே போயிடணும்” என்று சொன்னாள். உடனே இளங்கோ, சட்டைப் பைக்குள் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவள் மடியில் போட்டான். அவள், அதை எடுத்து இளங்கோவிடம் நீட்ட, அவன் மறுக்க, இறுதியில் அவன் சட்டைப்பைக்குள் அதைப் போடப் போனாள். அவனோ, "இதைக் கடனாத்தான் தாறேன். என் ஆபீசிலே சேர்ந்து, மாசக்கடசியிலே சம்பளம் வாங்கும்போது நீ தர வேண்டாம்; நானே பிடிச்சுடறேன்" என்றான். அவன் அன்பை கவுரவப்படுத்துவதற்காக, சரோசா, அதை வாங்கிக் கொண்டாள். அவன், அவளை வேலையில் சேர்த்தால், அவனும் கொலை செய்யப்படலாம் என்று தான் கூறிய பிறகும், இளங்கோ பிடிவாதமாக இருப்பதில், அவள் புல்லரித்துப் போனாள்.

   

அந்தப் பஸ் நிலையத்தில், அவள் நாய்னா அங்கே நிற்பவர்களின் முழங்கால்களில் முகம் படும்படி பார்த்தார். அவர் தனது கிழிந்த காக்கிச் சட்டையின் மேலே துண்டு மாதிரி ஒரு துக்கடா கோணியைப் போர்த்தியிருந்தார். கீழே குனிந்து தலையை நிமிர்த்திப் பார்த்தார். அவர் தோளில் ஒரு பை. தட்டு, தம்ளர், ஈயப்போணி ஆகியவற்றால் துருத்திய பை. இந்த அரிய பொக்கிஷத்தை இருந்த இடத்தில் வைத்திருந்தால், அதையும் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற அனுபவ பயம். எவரோ ஒருத்தர் அவரது கையில் ஒரு நாலணாவைத் திணித்தபோது, சரோசா, நாய்னாவை பாய்ந்து பிடித்தாள். "இன்னா நாய்னா, நான் உயிரோட இருக்கபோவே பிச்சை எடுக்கிறியா? காச, அவரண்ட நீட்டு” என்றாள். அப்போதுதான், அந்தக் காக கையில் விழுந்த உணர்வைப் பெற்ற நாய்னா, ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும், கொக்கின் மூக்குபோல் ஆக்கிக்கொண்டு, காசைக் கொத்தினார். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.