பிறகு, எவரிடம் கொடுப்பது என்று தெரியாமல் அவர் புலம்பியபோது, சரோசா, அந்தக் காசை எடுத்து பிச்சை இட்டவரிடமே பிச்சைபோல் கொடுத்தாள்.
தாத்தாவும், பேத்தியும், கோவில் வளாகத்திற்கு உள்ளே வந்தார்கள். அவரோ, தான் பிச்சை எடுக்கப்போகவில்லை என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காக “ஒன்னை பாக்கே” என்றார். அதைப் புரிந்து கொண்ட சரோசா, அவரது தலையை செல்லமாகக் குட்டிக்கொண்டே, அவரை இருந்த இடத்தில் உட்கார வைத்தாள். பெரிய பொட்டலத்தைப் பிரித்து, கோழி பிரியாணியைக்கிளறி, ஒரு கவளத்தை அவர் வாய்க்குள் போட்டாள். இதற்குள் பல சொறி நாய்கள் அங்கே கூடிவிட்டன. இந்தப் போட்டியை தவிர்ப்பதற்காக, அந்த வளாகத்தின் உட்பக்கம் உள்ள ஒரு தேவாலயக் கட்டிடத்திற்குள் நாய்னாவை அழைத்துப் போனாள். சின்னக் கட்டிடம்.. உள்ளே, ஒரு கதவு. அதற்கு வெளியே சின்ன செவ்வக வழி. இதன் முடிவில் இரும்புக் கிராதிக்கதவு. சரோசா, கிராதிக் கம்பியின் வழியே உள்ளே கைபோட்டு, தாழ்ப்பாளை நீக்கி தாத்தாவை உள்ளே நகர்த்தியபோது ஒரு ஏவல் பையன், அவள் வரவுக்கு வாயால் தாளிட்டான் :
"எக்கோ, என்ன தப்பா நினைக்காதே. இனிமேகாட்டி இந்த இடத்திலே நீங்க குந்தினால் என்னோட வேல போயிடுமுன்னு பாதர் சொல்லிட்டார். நானு வேலையிலே இருக்கது, இல்லாதது உன்னோட பொறுப்பு."
பெரிய மனிதன்போல் பேசிய அந்தப் பையனைத் துணுக்குற்றுப் பார்த்த சரோசா, நாய்னாவை கீழே இறக்கினாள். இரவில், அந்த இடத்தில்தான், அவரை அவள் படுக்க வைப்பாள். அஞ்சாறு வருடமாய் நடக்கிற சமாச்சாரம். இப்போ, புதுசா ஒரு பாதர் வந்திருக்காராம்; பேருதான் 'பாதா'.
சரோசா, நாய்னாவை நாய்கள் அண்ட முடியாத ஒரு ஒதுக்குப்புறமாகக் கொண்டுபோய் பிரியாணியை ஊட்டினாள். இதற்குள், அம்மைத் தழும்பன் அந்தப் பக்கமாக வந்தான்.
"ஒன்ன எங்கெல்லாம் தேடறதாம்? தொரண்ணன் ஒன்ன அர்ஜண்டா கூப்பிடுறார். எங்கம்மே பூட்டே?"
"போய்க்கினே இரு; இதோ வாரேன்."