அற்றுப்போனவள் போல சாய்ந்தாள். ருக்குமணி, அவளை ஆதரவாய் பிடித்து நார்க்கட்டிலில் உட்கார வைத்தாள். பிறகு அவள் சோகம் தனக்கும் தொத்த, கேட்பாரற்ற குரலில் பேசினாள் :
"அல்லாம் நல்லதுக்குதாம்மே. நடந்தத கெட்டகனவா நினைச்சுடு. இளங்கோ சார் நாளிக்கே வேலையில சேருறதா மல்லி சொல்லிச்சு. நீயும் சேர்ந்திடு. இல்லாட்டி ஆறின சோறு பழஞ்சோறுதான். ஏண்டா, பொறம்போக்கு! எல்லா தக்காளியையும், அக்குவேறு ஆணிவேறா பண்ணிட்டியே. நானு கொயம்புக்கு இன்னடா பண்ணுவேன்? ஏம்மே சரோசா, ஏதாவது பேசி என் வயித்திலே பாலு வாருமே."
ருக்குமணி, மகன் குதறிப்போட்ட தக்காளி சதைகளை பொறுக்கிக் கொண்டே, சரோசாவைப் பார்த்தாள். அவள் பிரச்சினை மட்டும் குறுக்கே வரவில்லையானால், இந்நேரம், அருமை மகனை தக்காளி மாதிரியே பிதுக்கியிருப்பாள். அதைப் புரிந்து கொண்டது போல் அந்தப் பயலும் அம்மாவுக்குப் பயந்து சரோசாவின் மடியில்போய் உட்கார்ந்து கொண்டான். ஏதோ ஒரு பொருள் தன் மடியில் உட்கார்ந்திருக்கிறது என்ற உணர்வு மட்டுமே உந்த, சரோசா ருக்குமணியைப் பார்த்தாள். பிறகு விரக்தியோடு பதிலளித்தாள் ;
"நீ நினைக்கது மாதிரி இளங்கோ சொல்ற வேலையில சேர்ந்திட்டா, அண்ணாத்தே என்ன விட்டுவைக்க மாட்டாரு ருக்கு.”
"இப்ப மட்டும் விட்டுவைக்கானா? அதென்ன கூத்து? எவனோ பொறுக்கிக்கி நீ ஏன் பயப்படறே? கண்றாவியா இருக்கு."
சரோசா, நார்க்கட்டிலில் சாய்ந்து சுவரில் தலையை போட்டுக் கொண்டு, அந்தத் தலையை அங்குமிங்குமாய் புரட்டிக் கொண்டு, ருக்குமணிக்குக் கதை சொல்வது போல் சொன்னாள்:
'அண்ணாத்தைய பத்தி சரியா தெரிஞ்சா இப்படிப் பேசமாட்டே ருக்கு. அவரோட அஞ்சு வருஷமா இருக்கிற பழக்கத்த அறுத்துக்கினுபோறது, என்னையே நான் அறுத்துக்கிறதுமாதிரி. போன மாசம் துரையண்ணே வீட்டுல எங்க கோஷ்டியில ஒருத்தன் தண்ணியில மிதந்தான். அப்போ பார்த்து அண்ணாத்த வந்தாரு. அவருகிட்டயே 'நாளைக்கி கோர்ட்டுல ஒன் பேரையும் சொல்லப்போறேன் அண்ணாத்தேன்னு' சொம்மா தமாஷுக்குச் சொன்னான். அண்ணாத்தையும்