(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

அந்தப் பெயரைப் பற்றி விசாரித்தாள்.

  

அது 'தெய்வசிகாமணி' - என்ற பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு என்பதை ரவி விளக்கினான்.

  

"மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் போல் தானே இந்தப் பெயரும்?" என்று கமலி ரவியிடம் பதிலுக்கு வினவிய போது,

  

"அடடே! தமிழ்ல கூட நல்லாப் பேசுறாங்களே! உட்காருங்க தம்பீ! அவங்களையும் உட்காரச் சொல்லுங்க" என்றார் இறைமுடிமணி. அவர் வேண்டிக் கொண்ட உடனே ரவி எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான். கமலி உட்காரவில்லை. விசுவேசுவர சர்மா அங்கே இருப்பதைப் பார்த்து அவர் எதிரே அவள் உட்காரத் தயங்கினாற் போலப்பட்டது. சர்மாவும் அந்தத் தயக்கத்தை கவனித்தார்.

  

"நீங்க பேசிண்டிருங்கோ... நான் போய் மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வந்துடறேன்" - என்று சொல்லி விட்டு எழுந்திருந்து போனார் சர்மா. அவர் சென்ற பின் எஞ்சிய மூவருக்கும் பலவற்றைத் தயங்காமல் பேசிக் கொள்வதற்கு உரிய சுதந்திரம் கிடைத்த மாதிரி இருந்தது. சர்மா சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கமலி ரவிக்கு அருகே மெல்ல ஒதுங்கி அமர்ந்து கொண்டாள்.

  

"தமிழ் மட்டும் சொல்லிக் கொடுத்ததோட நிறுத்திடாமே 'அவங்களுக்கு' நம்ம பண்பாடுகளையும் பழக்கப்படுத்தியிருக்கீங்க தம்பி! எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" - என்றார் இறைமுடிமணி.

  

அவருடைய கணீரென்ற குரல், தனிப்பட்ட உரையாடலிலும் உணர்ச்சி மயமாகி விடும்போது மேடைப் பிரசங்கம் போலப் பாய்ந்து பாய்ந்து பேசும் அவரது பேச்சு எல்லாவற்றையும் கவனித்த கமலி அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவல் காண்பித்தாள். ரவி அவளுக்கு விவரித்துச் சொன்னான். அவன் கூறியதை இறைமுடிமணி பணிவோடு மறுத்தார்.

  

"தம்பி எம்மேலே இருக்கிற பிரியத்தாலே ரொம்ப மிகைப்படுத்திச் சொல்லுது. இந்த ஊர்ல நான் ஒரு சாதாரண விறகுகடைக்காரன். அறிவு இயக்கத்தைச் சேர்ந்த ஊழியன்."

  

"உங்கள் இயக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.