"ரொம்ப நாள் உபயோகத்திலே இல்லாமல் மூலையில் கிடக்கிற செப்புப் பாத்திரத்திலே அது செப்புங்கிறதே மறைஞ்சு போற மாதிரிப் பாசமும் களிம்பும் ஏறிப் படர்ந்து விடறாப் போல இந்த நாட்டிலே அறிவும் உண்மையுமே மறையிர அளவுக்குச் சாதி சமயச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளும் பெருகிப் போச்சு. அறிவையும் உண்மையையுமே மூடி மறைக்கிற சடங்குகளைத் தகர்க்கணும்கிறது எங்க கொள்கை. பாசமும் களிம்பும் பிடிச்சு நீலம் பாரிச்சுப் போன பாத்திரத்தைப் புளிப்போட்டுத் துலக்கி அதன் அசல் நிறத்தையும், பிரகாசத்தையும் காமிக்கிற மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். சுய மரியாதை இயக்கம் ஆரம்பிச்சதே இதுக்குத்தான். சடங்குகளை விட உண்மையும் அறிவும் உயர்ந்தவை."
"சுய மரியாதை என்றால்... அதாவது?"
"எந்த நிலையிலும் பிறரால் அவமரியாதைப் படாமல் நம்மைக் காத்துக் கொள்வதும் நாம் பிறரை அவமரியாதைப் படுத்தாமல் வாழ்வதும் தான் சுயமரியாதை."
"உங்கள் விளக்கம் அழகாக இருக்கிறது" - என்று அவரைப் பாராட்டினாள் கமலி.
"ஆமாம்! அப்பா எதுக்காக மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வரப்போறார்?" என்று அதுவரை அவர்களுடைய அந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் கவனித்துக் கொண்டிருந்த ரவி இறைமுடிமணியிடம் கேட்டான்.
வடக்குத் தெருவில் உள்ள மடத்துக்குச் சொந்தமான காலி மனையில் தான் ஒரு பலசரக்குக் கடை வைத்துக் கொள்வதற்காக ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொள்ள வந்திருக்கும் விவரத்தை இறைமுடிமணி ரவியிடம் தெரிவித்தார்.
அப்போது கமலி திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ஆவலோடு எதிர் வரிசை வீடுகளிலிருந்தும், பக்கத்து வீடுகளிலிருந்தும் முகங்கள் நீண்டு மறைவதை ரவியும், இறைமுடிமணியும் கவனித்தனர்.
"தங்கள் வீடுகளுக்கு யார் வருகிறார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்