சொந்தமான காலி மனையை அஹமத் அலி சாய்புவின் புதிய ஜவுளிக்கடை பிராஞ்ச் ஒன்றைத் திறக்க லீஸில் ஓர் இருபது வருஷத்துக்கு விடச் சொல்லி சிபாரிசு செய்திருந்தார் சீமாவையர். சாய்பு எவ்வளவு வேண்டுமானாலும் வாடகையாகத் தரத் தயாராயிருக்கிறார் என்றும், முன் பணமாகவும் ஒரு பெருந்தொகை மடத்துக்குத் தருவதோடு கட்டிடத்தைத் தம் செலவில் கட்டிக் கொள்ள அவரால் முடியும் என்றும் அவருக்கு அந்த இடத்தை விடுவதால் மடத்துக்குப் பெரிய லாபம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தது. படித்ததும் இறைமுடிமணி சர்மாவை நோக்கிக் கேட்டார்: -
"நம்ம ஒப்பந்தம் கையெழுத்தாறதுக்கு முந்தியே இந்தக் கடிதாசைச் சாய்பு கொண்டாந்து கொடுத்தும் நீ ஏன் பேசாமல் இருந்தே?"
"மனுஷனுக்கு வாக்கு நாணயம் வேண்டாமா? நீதான் முதல்லே அந்த இடத்தைக் கேட்டே. உனக்கு வாக்குக் குடுத்தாச்சு. அப்புறமா இன்னொருத்தர் வந்து கூடக் கொஞ்சம் ரூபாய் தரேங்கிறார்னு நான் வார்த்தை மாறலாமா? உனக்கு விடறேன்னு மடத்துக்கும் எழுதிக் கேட்டுண்டப்புறம் நான் யாருக்கும் எதுக்கும் பயப்பட வேண்டியதில்லே..."
"எப்படியோ தகவல் தெரிஞ்சுக்கிட்டு நல்ல சமயத்திலே குறுக்கே வந்து நுழைஞ்சிருக்காரு மனுஷன். சீமாவையருக்கும் அஹமத் அலி சாயபுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் கூட உண்டும்பாங்க..."
"எப்பிடியானா என்ன தேசிகாமணி! நான் ஏமாறலே... ஏமாற மாட்டேன். தெருமுனையிலே இருக்கிற காலி இடத்திலே பலசரக்குக் கடைபோட்டால் அக்கிரகாரத்து மனுஷாளுக்கும் மத்தவாளுக்கும் சௌகரியம். பலசரக்குக் கடை அளவு ஜவுளிக்கடை அன்றாடத் தேவைக்குப் பயன்படறதா இருக்கப் போறதில்லே. ஏற்கனவே பஜார்லே பத்து இருபது ஜவுளிக்கடை இருக்கு. அத்தனையிலேயும் பெரிய கடை வந்துட்டுப் போனாரே பாய், அவரோடது தான். இவ்வளவும் போறாதுன்னு புதுசா இன்னும் தெரு முனையிலே எதுக்கு ஒரு ஜவுளிக்கடை? சிங்கப்பூர் பணம் வெள்ளம் வெள்ளமா வரது. ஊர்ல முக்கால்வாசி வீடு நெலம் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிப் போட்டாச்சு. இன்னம் ஆசை தீரலே. எதிலே, எதை லீஸுக்கு எடுக்கலாம் எங்கே கடை போடலாம்னு தேடிண்டு அலையறாங்க."
"நிஜமாவே கடை போடணும்கிறதை விடப் போட்டிக்கு நின்னு எனக்கு அந்த இடம் கிடைக்க