தன் மகனின் நட்பை நம்பி அவனிடம் தன்னைப் பூரணமாக ஒப்படைத்துக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் ஒருத்தியைக் காமாட்சி இப்படிப் புண்படுத்தி விட்டாளே என்று சர்மாவுக்கு வருத்தமாக இருந்தது.
"நடக்கக் கூடாதது ஒண்ணும் நடந்துடலை. எதுக்காக இப்பிடிக் கூப்பாடு போட்டு இரையரே? பேசாம உள்ளே போய் உன் காரியத்தைப் பாரு" - என்று காமாட்சியம்மாளைக் கண்டித்துவிட்டுப் பார்வதியின் பக்கம் திரும்பி, "ஏய் பாரு! நீ அவளை மாடிக்குக் கூட்டிண்டு போ..." - என்று கமலியைச் சுட்டிக் காட்டினார். பார்வதியும் கமலியும் மாடிக்குப் போனார்கள். அவர்கள் சென்றபின் மேலும் காமாட்சியம்மாளைக் கண்டித்தார் அவர்:
"உனக்கு உன் பெண்ணைக் கண்டிக்கிறதுக்குப் பாத்தியதை உண்டு. அடுத்தவா மனசு புண்படறாப்ல பேசறதுக்கு நீ யாரு? நீ பேசினது கொஞ்சங் கூட நன்னா இல்லே. வீடு தேடி வந்திருக்கிறவாளைப் பேசற பேச்சா இது?"
"நான் பேசலே. ஊரே பேசிண்டிருக்குங்கறது உங்களுக்குத் தெரியாது போலிருக்கு."
-காமாட்சியம்மாள் போருக்குக் கொடி கட்டுகிறாள் என்பது சர்மாவுக்குப் புரிந்து விட்டது. இது ஒரு பெரிய சண்டையாகி மாடியிலிருக்கும் கமலியின் கவனம் மறுபடியும் கவரப்பட்டு இரசாபாசமாவதை அவர் விரும்பவில்லை.
"பேசாமே உள்ளே போய் உன் கைக் காரியத்தைப் பாரு" - என்றார் சர்மா. அவர் அதட்டிய குரலுக்குக் கட்டுப்பட்டுக் காமாட்சியம்மாள் உள்ளே சென்றாள்.
சீக்கிரமோ, அல்லது சிறிது காலந் தாழ்த்தியோ அந்த வீட்டில் ஏற்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்த ஒரு பிரச்சனை இன்றே இப்பொழுதே விளைந்து விட்டது. விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படாமல் இருக்கும்போதே காமாட்சியம்மாள் சண்டைக்குக் கிளம்பியிருந்தாள். அதட்டியும் மிரட்டியுமே அதிக நாள் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்பது சர்மாவுக்குத் தெரிந்துதான் இருந்தது.