காரியம். இதற்காக என்றே தானோ ரவியோ இருபத்து நாலுமணி நேரமும் வீட்டில் அடைந்து கிடந்து காமாட்சியம்மாளைக் கவனித்துக் கொண்டிருப்பது என்பதும் நடைமுறையில் சாத்தியமாகாத காரியம். கமலியின் மேலுள்ள அனுதாபத்தினாலேயே அவர் இப்போது இப்படி நினைத்தார். பச்சைக் கிளியைக் கூண்டிலடைத்த மாதிரி அவளை அந்த வீட்டின் கடுமையான ஆசார அனுஷ்டானங்களில் சிக்க வைப்பதற்கு அவரே தயங்கினார். கமலியும் ரவியும் சங்கரமங்கலத்தில் வந்து இறங்குவதற்கு முன் அவர் மனத்தில் பல தயக்கங்கள் அலை போதியிருந்தன. அவை வெறும் தயக்கங்களாகத் தான் இருந்தனவே ஒழிய வெறுப்புகளாக இல்லை. கமலி வந்து பழகியபின் அவரைப் பொறுத்தவரை அந்தத் தயக்கங்கள் கூட மெல்ல மெல்ல மாறி உள்ளூறப் பிரியமாக முகிழ்ந்திருந்தது. காரணமும் அர்த்தமும் இல்லாத ஒர் குருட்டுக் காதலாக அது அவருக்குப் படவில்லை. இவன் அவள் மனத்தைக் கவர்ந்ததற்கும் அவள் இவன் மனதைக் கவர்ந்ததற்கும் நியாயமான இயல்பான காரணங்கள் இருப்பதை இப்போது அவர் உணர்ந்தார். அந்நிய தேசத்துக்குப் போய்த் திரும்பும் சராசரி இந்திய இளைஞன் திமிருக்காகவும் ஊரார் வியப்பதற்காகவும் ஒரு வெள்ளைத் தோலுக்குரியவளை உடன் இழுத்துக் கொண்டு வருவதைப் போல் இது இல்லை.
ரவியே கடிதத்தில் எழுதியிருப்பதைப் போல் இது உண்மையிலேயே காந்தருவ சம்பந்தமாகத்தான் இருந்தது. இருவருடைய பிரியங்களிலும், அந்தரங்களிலும் அவருக்குச் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்ட பரஸ்பரக் கவர்ச்சி என்று மட்டும் அதை நினைக்க முடியவில்லை. உடலையும் தவிர அறிவுக்கும் ஒத்த உணர்வுகளுக்கும் ஒத்த எண்ணங்களுக்கும் இந்தக் காதலில் அதிக சம்பந்தம் இருப்பது புரிந்தது.
காமாட்சியால் இதை வெறுக்க முடிந்ததுபோல் அவரால் இதை வெறுக்க முடியவில்லை. பூரண ஞானத்தின் கனிவு எந்த மனத்தில் நிரம்பியிருக்கிறதோ, அந்த மனத்தில் மிகவும் கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் ஒரு போதும் வருவதே இல்லை. எங்கு கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் நிரம்பியிருக்கிறதோ அங்கே பூரண ஞானம் இருப்பதில்லை. கொச்சையான வெறுப்புகளும் தூஷணைகளும் பூரண ஞானத்தை அழித்து விடுகின்றன. 'தூஷணம் ஞான ஹீனம்' - என்பதை அவர் நினைத்தார்.
வெளியே போயிருந்த ரவி திரும்பி வந்தான். வாசல் திண்ணையிலிருந்த சர்மா அங்கேயே