"என்னைத் தப்பாப் புரிஞ்சுக்காதே! உன்னோட லெட்டர் கிடைச்சப்பவும் அதுக்கப்புறமும் இருந்த கோபமும் குழப்பமும் கூட இப்போ எனக்கு இல்லே, அந்தப் பெண் கமலியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க சிநேகிதத்திலேயும் தப்பு இருக்கிறதாப் படலே. ஆனா உங்கம்மா, ஊர் உலகம் எல்லாரும் இதுக்குக் குறுக்கே இருக்காங்கிறதை நீ மறந்துடப்படாது."
"நீங்க தப்பாப் புரிஞ்சுக்கல்லேங்கிறதே எங்க பாக்கியம்தான் அப்பா!"
"தப்பாப் புரிஞ்சுக்கல்லைன்னாலும் சூழ்நிலைகளுக்கும் மற்றவர்களின் நிர்ப்பந்தங்களுக்கும் ஊர், உலகத்துக்கும் நான் கட்டுப்பட்டவன்கிறதை நீ மறந்துடாதே...."
"இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டமே அதன் பூரண ஞானவான்கள் எல்லாரும் பயந்தாங் கொள்ளிகளாக இருப்பது தான்..."
"அறிவு என்பது வேறு. சுற்றுப்புறத்தோடு ஒத்துப் போவது என்பது வேறு... நான் இதை எனக்காகச் சொல்லலே ரவி! இன்னிக்குச் சாயங்காலம் அவ தானா நல்லது செய்யறதா நெனச்சுண்டு விளக்கேத்தி வைக்கப்போக உங்கம்மா சத்தம் போட்டு இரைஞ்சாளே, அது மாதிரி ஒண்ணொண்ணா நடந்தா வீணா அவ மனசு புண்படுமேன்னுதான் யோசிக்கிறேன்."
"சரிப்பா... நீங்களே இதுக்கு வேற யோசனை சொல்லுங்கோ. என்ன செய்யலாம்? ஒரு நா இரண்டு நாளோட போற விஷயம் இல்லே இது. இந்தத் தடவை நான் ஒரு வருஷ 'லீவ்'லே வந்திருக்கேன். இந்தியாவிலே ஒரு காலத்திலே பிரெஞ்சுக் காலனிகளா இருந்து இன்னிக்கு இந்திய யூனியனாயிட்ட பிரதேசங்களிலே பிரெஞ்சுக் கலாசாரமும் இந்தியக் கலாசாரமும் எந்த அளவுக்கு இணைஞ்சிருந்தது என்கிறதை ஆராய்ஞ்சு எழுதறத்துக்காக அவ வந்திருக்கா. அதுக்காக அமெரிக்கன் ஃபவுண்டேஷன் ஒண்ணு அவளுக்கு உதவி செய்யறது. ஒரு வருஷம் இங்கே இருக்கப் போறா. நானும் ஏறக்குறைய இதே மாதிரி ஒரு 'அஸைன்மெண்ட்'டிலே தான் வந்திருக்கேன். சங்கரமங்கலத்தை ஹெட் குவார்ட்டர்ஸா வெச்சுண்டுதான் எங்க காரியத்தைச் செய்யறதா வந்திருக்கோம்..."
"எனக்கு ஆட்சேபணையில்லே. ஒரு வருஷம் நீ ஊர்ல தங்கப்போறேங்கிறதைப் பத்தி எனக்கு