மாமியாரும் மருமகளுமாக இல்லாமலே காமாட்சிக்கும் கமலிக்கும் மாமியார் மருமகள் சண்டையை விடக் கடுமையான சண்டைகள் வந்துவிடும் போலிருந்தது. இவற்றை எல்லாம் உத்தேசித்துதான் ரவியிடம் ஓரளவு விரிவாகப் பேசி விடலாம் என்று ஆற்றங்கரைக்குப் புறப்படும்போது அவனைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்காகத் தேடியிருந்தார் அவர். ரவியின் திட்டம் என்ன? அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை எல்லாம் அவனிடமே மனம் விட்டுப் பேசிவிடத் தீர்மானித்திருந்தார் அவர்.
அந்த விஷயத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கவும் முடியாதபடி நெருக்கடி உருவாகியிருந்தது. ஊர் உலகம் என்று வெளியிலிருந்து நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் இன்னும் வந்துவிடவில்லை. என்றாலும் வீட்டுக்குள்ளேயே எதிர்பார்த்த நெருக்கடிகள் இன்று தொடங்கியிருந்தன. சீமாவையரின் கேள்வி, படித்துறையில் ஜபம் பண்ணிக் கொண்டிருந்த வைதிகர்களின் விசாரணை எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பிரச்சனை நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊரளாவியதாகவும் ஆகக்கூடும் என்பதற்கு அறிகுறிகளாகத் தோன்றின.
தம்முடைய மனைவி காமாட்சியம்மாள் அப்படிப் பேசியதற்குக் கமலியிடம் அவள் சார்பில் தானாவது மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. அதற்காக மாடிப்படி ஏறியவரின் செவிகளில் மங்கலமான துர்க்கா சப்த ஸ்துதியின் அழகிய ஸ்தோத்திரம் விழுந்தது.
"ஸர்வ மங்கல மாங்கல்யே ஸிவே சர்வார்த்த ஸாதிகே
ஸ்ரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே."
பார்வதி முதலில் சொல்ல அதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலி. கொஞ்சங்கூடக் குழப்பமில்லாத தெளிவான உச்சரிப்பில் கமலி அதைத் திருப்பிச் சொல்லியதைக் கேட்டுச் சர்மாவுக்கு மெய் சிலிர்த்தது. இப்படிப் பாந்தமாய் அழகாக ஸ்தோத்திரம் சொல்லுகிறவள் விளக்கேற்றியதால் லட்சுமி வீட்டில் தங்கமாட்டாள் என்று சாடியிருந்த காமாட்சியம்மாள் மேல் இப்போது மீண்டும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே ஏறிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த படியிலிருந்தே அதை மேலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சர்மா. தேசம், ஆசாரம், கலாசாரம், இனம், நிறம் இவற்றையெல்லாம்