மானிட ஜாதியின் ஒற்றுமைக்குப் பயன்படுத்தாமல் இடையூறுகளாகவும் தடைகளாகவும் பண்ணிவிட்டவர்கள் மேல் அந்த விநாடியில் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே படியேறிப் போய்க் கமலியிடம் பேசலாமா, அவர்கள் தனிமையைக் கலைக்காமல் அப்படியே திரும்பிக் கீழே போய் விடலாமா என்று படியிலேயே தயங்கினார் சர்மா. காமாட்சியம்மாள் நடந்து கொண்டதற்கு மாற்றாகக் கமலியிடம் இரண்டு வார்த்தை பேசி மன்னிப்புக் கேட்டாலொழிய மனம் நிம்மதியடையாது போலிருந்தது அவருக்கு.
மேலே படியேறி மாடிக்குள் பிரவேசித்தார் அவர். கமலியும், பார்வதியும் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரத்தை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.
"காமாட்சிக்கு வயசாச்சு! யாரைப் பேசறோம், என்ன பேசறோம்னு தெரியாமே முன் கோபத்திலே ஏதாவது பேசிடுவா. அதெல்லாம் ஒண்ணும் மனசிலே வச்சுக்க வேண்டாம். உடனே மறந்துடறது நல்லது...."
தன்னை நோக்கித் தனக்காகத்தான் அவர் இதைச் சொல்கிறார் என்பதை அடுத்த கணத்திலேயே கமலி புரிந்து கொண்டாள். இதற்கு அவளிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதை எதிர்பார்க்காமலே அவர் விடுவிடுவென்று படியிறங்கிக் கீழே போய்விட்டார். அவர் மனம் அப்போது ஒரேயடியாகக் கலங்கிப் போயிருந்தது. பேசாமல் முதலில் யோசித்திருந்தபடி கமலியையும் ரவியையும் அவர்கள் சங்கரமங்கலத்தில் இருக்கிற வரை வேணுமாமா வீட்டிலேயே தங்கவைத்து விடலாமா என்று கூட இப்போது தோன்றியது அவருக்கு. இதிலிருந்து வீட்டிலும், ஊரிலும் எந்தெந்த முனையில் எப்படி எப்படிப் பிரச்சனைகள் கிளைக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தார் அவர். வெளியே போயிருந்த ரவி வீட்டுக்கு வந்ததும் முதலில் அவனிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார். ரவியும், கமலியும் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி இருப்பதைப் பொறுத்து, அவருக்கு ஏற்பட்ட ஒரே ஒரு மனத்தயக்கம் கவலையில்லாமல் வளர்ந்த செல்வக் குடும்பத்துப் பெண்ணான கமலியின் பூப்போன்ற மனம் அடுத்தடுத்து வேதனைப் படும்படியான சம்பவங்கள் அந்த வீட்டில் நடந்து விடுமோ என்பதுதான்.
காமாட்சியம்மாள் என்ன பேசுவாள், எப்படி நடந்து கொள்வாள் என்பதை ஒவ்வொரு கணமும் கண்காணித்துக் கமலிக்கு ஏற்பட இருக்கும் மனத்துன்பங்களைத் தவிர்ப்பது என்பது இயலாத