அவனை எதிர்கொண்டு தடுத்து உட்கார வைத்து விட்டார்.
"உன்னை அப்பவே ஆத்தங்கரைக்குப் போறப்போ தேடினேன். நீ ஆப்படலே. எனக்குத் தனியாக உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்."-
"மூணாவது வீட்டு சுந்தரராமன் கூப்பிட்டான், போய்ச் சித்தநாழி பேசிண்டிருந்துட்டு வந்தேன்."-
"நாம இங்கேயே பேசலாமா? இல்லே மறுபடியும் ஆத்தங்கரைக்கே பொறப்பட்டுப் போலாமா?"
"ஏன்? பொழக்கடைத் தோட்டத்துக் கிணத்தடியிலேயே உட்கார்ந்து பேசலாமே அப்பா!"
"சரி! வா... சொல்றேன்."
இருவருமாகக் கிணற்றடிக்குப் புறப்பட்டுப் போனார்கள். கிணற்றடி மேடையில் சிமெண்ட் தளம் போட்டிருந்தது. தோய்க்கிற கல்லை ஒரு ஸ்டூல் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்ததால் உட்கார வசதியாயிருந்தது. சர்மா அதில் உட்கார்ந்து கொண்டார்.
அதற்கு இணையான உயரத்தில் அருகே இருந்த சிமெண்ட்டுத் தொட்டியின் சுவரில் ரவி உட்கார்ந்து கொண்டான்.
தாம் பேசத் தொடங்குவதற்கு முன் அதற்குப் பயன்படும் சில பூர்வாங்கமான தகவல்களை ரவியிடம் முதலில் விவரிக்கத் தொடங்கினார் சர்மா. கமலியைப் பற்றிய காமாட்சியம்மாளின் சந்தேகங்கள், அவள் அடிக்கடி தம்மிடம் தூண்டித் துளைத்துக் கேட்கும் கேள்விகள், அன்று மாலை கமலி சந்தி விளக்கு ஏற்றி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, சீமாவையரின் விசாரிப்பு, படித்துறையில் ஊர் வைதிகர்களின் கேள்விகள் எல்லாவற்றையுன் ஒவ்வொன்றாய் விளக்கமாகச் சொல்லிவிட்டு, அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று எதிர்பார்த்து அந்தப் பதிலுக்காகத் தம் பேச்சை நடுவே நிறுத்தினாற் போலச் சிறிது நேரம் நிறுத்தியிருந்தார் சர்மா.
"நீங்க சொல்றதெல்லாம் சரி அப்பா! இதிலே சிலது நான் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்...?"