"நான் எதுக்குடா? நீயே கேட்டுச் சொல்லு... போறும்..."
"இல்லே! காரணமாத்தான் சொல்றேன். நீங்களும் வாங்கோ... அப்பத்தான் சந்தேகத்துக்கு இடமில்லாமே அவளை நீங்க புரிஞ்சுக்க முடியும்."
சர்மா தயங்கினார்.
"யோசனை ஒண்ணும் வேண்டாம்! இப்ப என்னோட வாங்கோ சொல்றேன்"-
என்று கூறியபடியே ரவி எழுந்திருந்து நடந்தான். சர்மா வேறு வழியில்லாமல் பின் தொடர்கிறவரைப் போல் தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்தார்.
சர்மாவும் ரவியும் மாடிக்குப் போனபோது கூடக் கமலியும் பார்வதியும் தொடர்ந்து துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரத்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
"பாரு! நீ கொஞ்சம் கீழே போய் இரும்மா... நாங்க கொஞ்சம் பேசிட்டு அப்புறமா உன்னைக் கூப்பிடறோம்" - என்று சொல்லிப் பாருவைக் கீழே அனுப்பினார் சர்மா.
ரவிக்கு அப்பா அவளை அனுப்பியது பிடிக்க வில்லை.
"ஏன்? அவ இருந்தா என்ன? அவபாட்டுக்கு இருந்துட்டுப் போறா. அவளை ஏன் கீழே போகச் சொல்றேள் இப்போ?"
"இல்லே... அவ அப்புறம் வந்துக்கட்டும். நீ பேசாம இரு..."
ரவி இதற்கு மேல் தன் கோரிக்கையைத் தந்தையிடம் வற்புறுத்தவில்லை.
கமலி அவர்கள் உள்ளே வரக்கண்டதும் எழுந்து நின்றவள் இன்னும் நின்று கொண்டேதான் இருந்தாள்.