மாடியிலிருந்து ரவி கீழே இறங்கி வந்தான். மறுபடியும் அப்பாவும் பிள்ளையும் கிணற்றடிக்குப் போகவில்லை. கமலியைப் பற்றி மேலே விவாதிக்கவும் இல்லை.
மறுநாள் வேணு மாமாவிடம் கார் இரவல் வாங்கிக் கொண்டு ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்குப் போய் ஒரு வாரம் சுற்றிப் பார்க்கும் உத்தேசத்துடன் புறப்பட்டிருந்தார்கள்.
உதவிக்கும் துணைக்குமாகக் கிளீனர் மாதிரி யாராவது ஒரு வேலைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு போகுமாறு அப்பாவும், வேணு மாமாவும் எவ்வளவோ கூறியும் ரவி கேட்கவில்லை.
"நானும் கமலியுமா - மாத்தி மாத்தி ஓட்டிப்போம். ரெண்டு பேருமே ஆட்டோமொபைல் எக்ஸ்பர்ட்ஸ். எந்த 'ட்ரபிள்' வந்தாலும் நாங்களே சமாளிச்சுப்போம்" - என்றான் அவன்.
ஒரு வாரம் என்று புறப்பட்டிருந்தாலும் அவர்கள் திரும்பிச் சங்கரமங்கலம் வரப் பத்து நாட்கள் வரை ஆகி விட்டன. பத்து நாள் வீடு வெறிச்சோடிப் போயிருந்தது.
மறுபடி அவர்கள் இருவரும் காரில் ஊர் திரும்பிய ஒரு பிற்பகலில் - காமாட்சியம்மாள் வீட்டுக் கூடத்தில் சாவகாசமாக அமர்ந்து தன்னை மறந்த லயிப்போடு வீணையில் 'தாயே யசோதா'வின் தோடியைப் பெருகச் செய்து கொண்டிருந்தாள். முதலில் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த கமலி கூடத்தில் வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காமாட்சியம்மாளைப் பார்த்ததும் சாட்சாத் சரஸ்வதி தேவியையே எதிரே பார்த்தது போல் பயபக்தியுடன் அப்படியே பிரமித்து நின்று விட்டாள்.
அந்த வீடே அப்போது தோடியிலும் கிருஷ்ண கானத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கமலிக்கு அது ஒரு மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவமாக இருந்தது. வீணையோடு அமர்ந்திருந்த கோலத்தில் காமாட்சியம்மாளின் முகத்திலிருந்த அபூர்வமான தேஜஸ் அவளை மிகவும் கவர்ந்தது. அவள் கண்களை அந்தத் தோற்றம் கவர்ந்தது என்றால் செவிகளை அந்த வீணாகானம் என்னும் மாதுர்ய மழை கவர்ந்திழுத்தது.