(Reading time: 11 - 21 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

  

"சரிம்மா! நான் கீழே போய்ப் பாருவை அனுப்பறேன்"... என்று கூறி விட்டு மாடியிலிருந்து கீழே புறப்பட்டார் சர்மா. "நீங்க போங்கோ அப்பா! இதோ ஒரு நிமிஷத்திலே வந்துடறேன்" என்றான் ரவி.

  

"மொள்ள வா... அவசரம் ஒண்ணுமில்லே" என்று அவனுக்குப் பதில் சொல்லியவாறே படியிறங்கினார் சர்மா. இந்தியக் கலாச்சாரத்தின் அழுத்தமான பழம்பெரும் தன்மைகள் நிறைந்த ஒரு சூழலில் அதன் பல அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட அவள் வாழத் தயாராயிருப்பது சர்மாவுக்குப் புரிந்தது.

  

கமலியிடமிருந்து இவ்வளவு விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்ட பின் இனி அவளை 'வேணு மாமா வீட்டில் தங்கிக் கொள்ள முடியுமா' என்று விசாரிப்பதே முறையில்லை என்று அவருக்குத் தோன்றிவிட்டது. கமலியைப் பற்றி ரவி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவர் இப்போது உணர்ந்து கொண்டார். காமாட்சியம்மாளின் முரண்டுகளால் என்னென்ன அசந்தர்ப்பங்கள் ஏற்படுமோ என்று தான் அவர் இப்போது உள்ளூறத் தயங்கிக் கொண்டிருந்தார். அந்த முரண்டுகளால் கூடக் கமலி பாதிக்கப்பட் மாட்டாள் என்று இப்போது அவருக்குத் தோன்றியது.

  

விளக்கு ஏற்றி வைத்த சம்பவத்தால் காமாட்சியம்மாள் பார்வதியிடம் பேசுவது போல் தன்னைக் குத்திக் காட்டிப் பேசியதைக் கமலி எங்கே மனத்தில் வைத்திருந்து ரவியிடம் சொல்லிக் கலகம் மூட்டி விடுவாளோ என்று எண்ணியிருந்த சர்மாவுக்கு அவளது அடக்கம் முற்றிலும் புதுமையாயிருந்தது. காமாட்சியம்மாளின் பேச்சை ஒரு பெரிய தவறாகவே அவள் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு வேறு காரணங்களுக்காகக் காமாட்சியம்மாள் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பும், மரியாதைகளும் இதனால் ஒரு சிறிதும் குறையவில்லை என்பது தெரிந்தது.

  

கமலியால் பிரச்னைகள் எதுவும் வராது என்று தெரிந்தாலும் - காமாட்சியம்மாளாலும் ஊராராலும் விரோதிகளாலும் இது சம்பந்தமாகச் சில பிரச்னைகள் எழக்கூடும் என்ற பயம் இன்னும் அவர் மனத்தில் இருக்கவே செய்தது.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.