அவர்கள் கண்டிக்கக் கூடாதென்று நான் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு வேளை பாருவைக் கண்டிக்காமல் அவர்கள் என்னையே நேருக்கு நேர் கூப்பிட்டுக் கண்டித்து இருந்தால் கூட நான் அதற்காக வருத்தப் பட்டிருக்க மாட்டேன். அவர்கள் உரிமையோடு என்னை ஏன் கண்டிக்க மாட்டேனென்கிறார்கள் என்பது தான் என் வருத்தமே தவிர ஏன் கண்டிக்கிறார்கள் என்பது வருத்தமில்லை. ரவியின் அம்மா உரிமை எடுத்துக் கொண்டு என்னை நேருக்கு நேர் கண்டித்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பேன்..."
- இத்தனை அடக்கமும் விநயமும் நிறைந்த ஒரு பதிலை அப்போது அவளிடமிருந்து சர்மா எதிர்பார்க்க வில்லை. அதனால் சிறிது தயக்கத்துக்கும், மௌனத்துக்கும் பின் மேலும் அவர் அவளைக் கேட்டார்:-
"ஒரு வருஷத்துக்கும் மேலே இங்கே இருக்க நேரலாம்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். இந்த வீட்டிலேயே உன் சௌகரியங்களுக்கு ஒத்து வருமா? ஒத்து வருமானால் நீயும் ரவியும் தாராளமாக் இங்கேயே இருந்துக்கலாம். இல்லையானா இதைவிட சௌகரியமாகவும், தனியாகவும் வேற இடம் உங்களுக்காகப் பக்கத்திலேயே ஏற்பாடு பண்ண என்னாலே முடியும்."
"இங்கே எனக்கு எந்த அசௌகரியமும் இருக்கிறதாகப் படவில்லை. ஒரு வீடு என்பது சௌகரியங்களும் அசௌகரியங்களும் சேர்ந்ததாகதான் இருக்கும். தனியாகச் சௌகரியங்களே நிறைந்ததும், தனியாக அசௌகரியங்களே நிறைந்ததுமான ஒரு வீடு உலகம் முழுவதும் தேடினாலும் கூடக் கிடையாது."
"அப்படியில்லேம்மா! ஒத்துப் போகாத மனுஷா ஒருத்தர் இருந்தாலும் தினம் விடிஞ்சு எழுந்திருந்தாச் சண்டையும் பூசலுமான்னா இருக்கும்? சண்டையும் பூசலுமாகவே இருந்தா எப்போ மத்த காரியமெல்லாம் பாக்கறது?"
"நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இதுவரை எந்த ஒரு சண்டையும் பூசலும் இங்கு என் வரையில் ஏற்பட்டதே கிடையாது. இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பதையே நான் விரும்புகிறேன். காமாட்சியம்மாளைப் பல விஷயங்களில் என் குருவாக நான் வரித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ