இருக்கிறது."
"உன்னைச் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும் விருப்பமோ சம்மதமோ காமாட்சியம்மாளுக்கு இல்லாமலிருக்கலாம்."
"துரோணரின் விருப்பத்தையும் சம்மதத்தையும் எதிர்பார்த்தா ஏகலைவன் அவருக்குச் சிஷ்யனானான்? சிரத்தையும் பக்தியும் மட்டும் இருக்குமானால் எந்தக் குருவையும் வழிபட்டு பாவித்துக் கொண்டே கற்கவேண்டியதைக் கற்று விட முடியும்."
"அப்படியானால் இதைவிட மிகவும் சௌகரியமான தனிமையான வேறு எந்த இடத்திலும் வசிக்க நீ விரும்பலையா?"
"நிச்சயமாக இல்லை. 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி'.. என்பதற்காக உங்கள் நாட்டில் பழமொழி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கும் அப்படித்தான். வசதிகளிலும், சௌகரியங்களிலும் ஏற்கனவே நான் அலுத்துப் போய்விட்டேன்..."
கீழ்த்திசைக் கலாசாரத்திலும் நூல்களிலும் தத்துவங்களிலும், அவளுக்கு இருந்த ஆழமான பிடிப்பை அவள் பதில்களிலிருந்து சர்மாவால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
"சரி! உன்னை அநாவசியமாக இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யறதுக்காக என்னை மன்னிச்சுடும்மா. இந்த வீட்டில் தவறுதலாகவோ, எங்கள் அறியாமையாலோ, உனக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் தயவு பண்ணி அதை பொருட்படுத்தாதே. உனக்கு வசதிக் குறைவுகள் ஏற்பட்டு நீ மனசு நோகும்படி ஆயிடப் படாதேன்னுதான் முன்னெச்சரிக்கையா இதெல்லாம் உங்கிட்டக் கேட்டேன்... தப்பா நெனைச்சுக்காதேம்மா...."
"நீங்கள் ரவியின் தந்தை. பெரிய ஸ்காலர். இந்தியக் கலாச்சாரத்தின் பூரணமான தன்மைகள் நிரம்பியவர். உங்களை நான் என்றும் எதற்காகவும் தப்பாக எடுத்துக்கொள்ளும் நிலைமை உருவாகாது - உருவாகக் கூடாது."
சர்மா ரவியின் முகத்தைப் பார்த்தார். 'இப்போது உங்களுக்குத் திருப்திதானா?' என்று பதிலுக்கு முகக்குறிப்பினாலேயே கேட்பது போல் அவரை ஏறிட்டுப் பார்த்தான் ரவி.