"இவளை நான் கேட்டா எனக்காகப் பதில் சொல்றதா நீங்க நினைச்சுப்பேள். உங்க சந்தேகத்தை நீங்கள் நேரே கேட்டுடுங்கோ" என்று சர்மாவிடம் சொன்னான் ரவி.
சர்மாவும் ரவியும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். கமலியையும் உட்காரச் சொல்லி ரவியே வேண்டினான். ஆனால் அவள் உட்காரவில்லை.
"உட்காரேம்மா... உங்கிட்டக் கொஞ்சம் பேசலாம்னு வந்திருக்கோம். எவ்வளவு நாழிதான் நின்னுண்டேயிருப்பே? உன் மரியாதை எனக்கும் புரியறதும்மா. இப்போ நானே சொல்றேன். நீ கொஞ்சம் உட்கார்ந்துக்கோ..."
"பரவாயில்லே. சொல்லுங்கள், நிற்பது எனக்கு ஒன்றும் சிரமமாகப் படவில்லை..."
"உனக்கு எதுவும் சிரமமா இருக்கோ இல்லையோ. நீ நிக்கறது எங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்மா..."
"கஷ்டம் ஒன்றுமில்லை, சொல்லுங்கள்..."
"மனசுலே ஒண்ணும் ஒளிவு மறைவில்லாமே எதுவும் தப்பா எடுத்துக்காமே நான் கேக்கறதுக்கெல்லாம் நீ பதில் சொன்னியானா எனக்குப் பெரிய உபகாரமா இருக்கும் அம்மா! நான் ரவியைத்தான் உன்னைக் கேக்கச் சொன்னேன். அவன் நீங்களே கேட்டுக்கோங்கோன்னு என்னைக் கொண்டு வந்து இங்கே நிறுத்திட்டான்."
"..."
"ஏம்மா நீ சாயங்காலம் சந்தி விளக்கு ஏத்தி வச்சதைப் பத்திக் காமாட்சி, பாருகிட்ட என்னென்னமோ இரைஞ்சிண்டிருந்தாளே, அதுலே உனக்கு ஒண்ணும் மனசு வருத்தம் இல்லியே? தயங்காமல் நீ எங்கிட்ட நிஜத்தைச் சொல்லலாம்."
"வருத்தப் படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? அவர்கள் பாருவைக் கண்டித்தார்கள். பாருவை