Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 20 - சு. சமுத்திரம்
அப்பாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது சரிதானா என்று யோசித்து யோசித்து, மல்லிகாவிற்குத் தலை குழம்பியது.
அப்போது, மல்லிகாவின் தம்பி பரமசிவத்திடம், சரவணன் ஒரு காகிதத்தை நீட்டி, விசாரித்துக் கொண்டிருந்தான்.
மல்லிகாவிற்கு, நாடி நரம்பெங்கும் ஏதோ ஒன்று வியாபித்தது. சொல்ல முடியாத, சொன்னாலும் விளங்காத அச்சத்தையும், அதே சமயம் அஞ்சாமையையும், துன்பத்தையும், அதேசமயம் இன்பத்தையும் ஏக்கத்தையும், அதே சமயம் எதிர்ப்பையும், பலமுனைப் பார்வையும், அதே சமயம் ஒரு முனைப்பட்ட உள்ள உணர்வையும் கொடுக்கும், ஏதோ ஒரு சுகம்... ஏதோ ஒரு...
சரவணனிடம், உள்ளத்தை முன்னால் விட்டு, உவகை முட்ட அவள் பின்னால் நடந்தாள். மெல்ல மெல்ல நடந்தாள். இருபதடி தூரத்தில், குடித்தனத் தோழிகளை பத்துத் தடவை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே, போனாள். பிறகு, “வக்கீல் அப்பா அனுப்பி இருப்பாங்க... இல்லன்னால் வரவா போறீங்க...” என்று அவனுக்குக் கேட்கும்படியாகப் பேசுவதாய நினைத்து, தனக்கே கேட்காமல் பேசினாள்.
சரவணன், அவளையே பார்த்தான். உல்லி உல்லிப் புடவைக்குப் பதிலாக, சின்னாளப்பட்டி காதில் ‘ரிங்’ இல்லை. கழுத்தில் செயின் இல்லை. கையில் வளையல்கள் இல்லை. ஆனால் இவற்றை விட மேலான ஏதோ ஒன்று அவளிடம் இருப்பது போல் தோன்றியது. காதலா... கனிவா... சேவை கொடுக்கும் திருப்தியா...
தட்டுத்தடுமாறி சரவணன் ஏதோ பேசப் போன போது, குடித்தனப் பெண்கள் ‘ஏதோ இருக்கு’ என்பது போல் பார்த்த போது, மல்லிகாவின் அம்மாள் செல்லம்மா, “அய்யோ... கடவுளே... எங்க அண்ணனுக்கா... என் உடன்பிறப்புக்கா” என்று தலையில் அடித்துக் கொண்டே வந்தாள். மல்லிகா துடித்துப் போய், அம்மாவின் கரங்களைப் பற்றிய போது, அவள் “உங்க அப்பாவ... தண்டையார்பேட்டையில்... மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நர்சிங்ஹோமில் சேர்த்திருக்காம். பிழைக்கிறது கஷ்டமாம்... அய்யோ... அண்ணா” என்று அரற்றினாள். பிறகு “‘மல்லிகா... மல்லிகா...’ன்னு சொல்லுக்குச் சொல்லு புலம்புகிறாராம்” என்று சொல்லிப்