வைத்தாள். இதற்குள், அதே அந்த கசாப்பு அலி, ஒரு பிளேடை எடுத்து, கங்காதேவியின் பெருவிரலில் ஒரு கோடு போட்டது. பிறகு அந்த விரலை எடுத்துப் பால் செம்பின் வாய்ப்பக்கம் பிடித்து அழுத்தியது. ரத்தத்துளிகள் சொட்டுச் சொட்டாய், பாலில் விழுந்தன. உடனே எல்லோரும் 'முர்கேமாதா, முர்கேவாலி' என்று கன்னங்களில் தப்பளம் போட்டுக்கொண்டனர். மகளைப்போல், சேலைகட்டியிருந்த சடாமுடி கங்காதேவி, தனது ரத்தம் கலந்த அந்தப் பால் செம்பை எடுத்து, சுயம்புவின் வாயில் ஊற்றினாள். உடனடியாக புரோகித அலி, சுயம்புவின் கையை எடுத்துக் கங்காதேவியின் கரங்களில் ஒப்படைத்தாள். உடனை சேட்டு வீட்டு கல்யாணங்களில் ஈடுபடுத்தப்படும் மேள வரிசைகள் ஆரவாரம் செய்தன. அந்தச் சத்தத்தை அமுக்கும் வகையில் கிளாரினெட் குழாய்கள் உச்சகட்டத்தில் ஓங்காரமிட்டன. சுயம்பு தாயின் காலைத் தொட, கங்காதேவி அணைத்துக்கொண்டாள். இருவரும் பின்னர் புரோகிதியின் ஆலோசனைப்படி, மீண்டும் மேடைக்கு வந்தார்கள். ஒன்றுபோல் உட்கார்ந்தார்கள். அப்போது, சுயம்புவுக்கு சென்னையில் சேரியின் சேரியில் வாழும் பச்சையம்மாவின் நினைவு வந்தது. போலீஸ் வேனில் ஏறும்போதுகூட, அவள் ‘மகளே, மகளே’ என்று கூக்குரலிட்டது இப்போது சந்தோஷத்திற்குச் சிறிது தாழிட்டது. பச்சையம்மாவும் ஒரு அம்மாதான். சின்னம்மா. உடனே சுயம்புவுக்குத் தனது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துப் பெருமைப்படுவதுபோல் ஒரு கற்பனை. ஆனால், இது பெருமைக்குரிய விஷயந்தானா என்று சந்தேகம். இறுதியாக, டேவிட் குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்துக் கையை ஆட்டி ஆட்டிக் காட்டுகிறான். முத்தம் கொடுக்கப் போவதுபோல் உதடுகளைக் குவிக்கிறான். டேவிட்... என் டேவிட்! இந்தப் பட்டுச்சேலை நல்லா இருக்கா டேவிட். எக்கா... நீ மட்டுமே வாழவேண்டிய இந்த மனசுல யாரைப் பற்றியெல்லாமோ நெனைக்கேன் பாரு... என்னை மன்னிச்சிடுக்கா!
இதற்குள், நீலிமா, அவன் முகத்தைத் திருப்பிப் பேச்சுக் கொடுக்கிறாள். அப்புறம் சுயம்பு, அவள் காட்டிய திசையில் பார்க்கிறான். சுலோச்சனாக்கா... அழுகிறாளா, சிரிக்கிறாளா! இவன் கையாட்டிக் கூப்பிட்டபோது, எல்லாக் கண்களும் அவளை மொய்க்கின்றன. உடனே அவள் லேசாய் தலையாட்டிவிட்டு, கூட்டத்தில் கரைந்து விடுகிறாள்.
புரோகிதி, கங்காதேவியின் காதில் கிசுகிசுத்தாள். அப்போதுதான் தேவிக்கே அந்த எண்ணம் வந்தது. மகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும். என்ன பேர் வைக்கலாம்.
கங்காதேவிக்கு தனது பாட்டி பேரான சீத்தாதேவி பெயரை வைக்க ஆசை. ஆனாலும் சுயம்புவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுயாட்சி சிந்தனை. சுயம்புவின் காதில்