கிசுகிசுத்தாள்; என்ன பெயர் வைக்கலாம்?
சுயம்பு பின்னால் நிற்கும் தன் சிநேகிதிகளைப் பார்க்கிறான். ஒவ்வொரு யோசனைக்கும் தலையாட்டி மறுக்கிறான். லட்சுமி, கண்ணகி என்கிறாள். வேண்டாம். அந்தப் பெயரைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அகலிகை... அதுவும் வேண்டாம். பாவப்பட்டவள். இறுதியில், சுயம்புவையே, நீயே சொல் என்பது மாதிரி பார்க்கிறார்கள். அவன் மனதுக்குள் ஒரு மின்னல். பத்தாவது வகுப்பில் படித்த ஆபுத்திரன் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதற்காகத் தமிழாசிரியர் விவரித்த மணிமேகலை பற்றிய குறிப்பு... ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ஒரு காப்பியத்தின் நாயகியான மணிமேகலை, விலைமாதர் குடும்பத்தில் பிறந்த குலமாது. சோழ இளவரசன் உதயகுமாரன், அவளைப் பலவந்தமாகக் கவரப் பார்க்கிறான். அவனாலேயே, படாத பாடு படுகிறாள். அனுபவித்த இன்னல்களும் கொஞ்ச நஞ்சமல்ல... ஆனாலும், அவன்மீது அவளுக்கும் ஒரு காதல். முற்பிறப்பை அறிந்தபிறகு அந்தப் பற்றற்ற நிலையிலும் காதல் ஒரு பற்றுக்கோலாகிறது. இறுதிக் கட்டத்தில், அவன், தன்னைக் கைப்பற்றாமல் இருப்பதற்காக, துறவிப் பெண் மணிமேகலை, காயசண்டிகை என்ற தேவப் பெண்ணின் வடிவம் எடுக்கிறாள். எப்படியோ உதயகுமாரன் அவளைப் பின் தொடர்கிறான். மனைவியை அவன் பெண்டாள நினைப்பதாக தவறாய் எண்ணிய காயசண்டிகையின் கணவன், இளவரசனை வெட்டிப் போடுகிறான். உடனே காயசண்டிகை உருவத்திற்குள் ஒளிந்திருக்கும் மணிமேகலை கத்துகிறாள். கதறுகிறாள். உச்சகட்டமாக ‘காயசண்டிகை வடிவினள் ஆயினேன் காதல்’ என்று நெகிழ்கிறாள். ஒரு துறவி காதலியானாள். ஆனால் இங்கேயோ, ஒரு காதலி, கடைசிவரை துறவியாய் வாழவேண்டிய நிர்ப்பந்தம். மணிமேகலையாவது, காயசண்டிகை என்ற பெண் உடம்பிற்குள் பெண்ணாய் நின்றாள். நானோ, சுயம்பு என்ற ஆண் உடம்பிற்குள் பெண்ணாய்த் தவிக்கிறேன்... அதோடு, சோழ இளவரசனைப்போல எனது டேவிட் மோசமானவரல்ல. ஆனாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான், அந்த மணிமேகலை மாதிரிதான். எவரிடமும் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே குமுற வேண்டும். அவள் துறவி. நான்அலி. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு என்றாலும், அதன் தாக்கம் ஒன்றுதான்.
அறுவைக்குப் பிறகு நாற்பது நாள் ஓய்வில் கங்காதேவியின் மூலமும் பல புத்தகங்களின் வழியாகவும் ஓரளவு தெளிவு பெற்ற சுயம்பு, இப்போது கங்காதேவியின் காதில் கிசுகிசுத்தான். மணிமேகலையின் வரலாற்றை ஒரு நிமிடத்தில் சொல்லி முடித்தான். கங்காதேவி கண்ணிர் மல்கிக் குலுங்கினாள். அவளுடைய தாய்வழிப் பாட்டியின் பேரும் மேகல்தான். உடனே மைக் முன்னால், அவளே எழுந்து “சுயம்பு என்ற பெயர் மேகல்” என்று இழுத்தபோது, சுயம்பு எழுந்து