Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 35 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 35
தாயும், மகளும் வீட்டிற்கு வந்தார்கள். மேகலை, தனது அறைக்குள் நுழையப் போனாள். உடனே கங்காதேவி, அவள் கையைப் பற்றி, செல்லமாக கன்னத்தைக் கிள்ளி, தனது அறைக்குள் கொண்டு வந்தாள். மூவர் புரளக்கூடிய பெரிய கட்டில், மாடத்தில் முர்கேவாலி மாதா. சுவர்களில் பல்வேறு வகைப் படங்கள். கங்காதேவி மகளுக்கு விளக்கினாள்.
“இந்த ஆயில் பெயிண்டிங் எங்க தாத்தா படம். அசல் ராஜ்புத். இது எங்க அம்மா படம். எப்படி ராணி மாதிரி இருக்காள் பாரு... அது என் அக்கா... இவன் என் அண்ணன்... இவனுக்கு நான் தம்பியாகாமல், தங்கையாய் ஆன கோபத்துல துப்பாக்கியை எடுத்து சுட வந்தான். பாலுல விஷத்தைக் கூடக் கலந்தான். அண்ணனுக்கு தம்பி, தங்கையா மாறுனாலும், தங்கைக்கு எப்பவும் அண்ணன் அண்ணன்தானே... அதனால அவனை என்னால் வெறுக்க முடியல... ஒனக்கும் ஒரு வகையில், இவன் உங்க பக்கம் சொல்றது மாதிரி தாய் மாமன்... பழைய ஜமீன் மாமன்...”
கங்காதேவி பெருமையோடு பேசப்போனதை வெறுமையோடு முடித்தாள். பிறகு தனக்கும் பாசம் கொடுக்க அதைத் திருப்பி வாங்க ஒரு ஜீவன் கிடைத்திருக்கிறது என்ற ஆறுதலில் மேகலையிடம் மனம் காட்டிப் பேசினாள்.
“நெசமாவே சொல்றேன்... நீ என் மகளா வந்ததுக்கு பெருமைப்படறேன்... இன்னும் பல ஜென்மங்கள்ள நீ மகளாய் வாரதுக்கு நான் ஆயிரம் தடவை கூட அலியாய்ப் பிறக்கத் தயார். ஆனால் ஒரு கண்டிஷன்... அடுத்த ஜென்மத்துல நீ நெசமாவே பெண்ணாப் பிறக்கணும். நானும், அப்படிப் பிறந்தால், சந்தோஷம்... இதே பிறப்பு தான் தலையில் எழுதி வச்சது என்றால், நெசமான பெண்ணா பிறக்கற ஒன்னை, நான் தத்து எடுத்துக்கணும். இதுதான் என் ஆசை... இப்படி இப்போகூட பல அலிங்க நெசமான ஆண்களையும், பெண்களையும் குழந்தையிலேயே தத்து எடுத்து வளர்க்காங்க... நான் கும்பிட்ட முர்காதேவி, என்னைக் கைவிடலை... உன்னை மாதிரி கள்ளங்கபடம் இல்லாத அதே சமயம், புத்திசாலியான ஒரு மகள் கிடைத்ததுல நான் படுற சந்தோஷத்துக்கு அளவே இல்லடி பேட்டி... இப்போ எனக்கே என் எல்லை தெரியுதுடி. எப்போ சாவு வந்தாலும் சந்தோஷமா போவேண்டி... ஒனக்கு என்கிட்ட மகளாய் வந்ததுல சந்தோஷமோ, இல்லியோ, ஆனால், எனக்கு சந்தோஷம் தாங்க