பரபரத்தார்கள். படபடத்தார்கள்.
தாயும், மகளும், வாயும், வயிறும்கூட வேறில்லாதவர்கள் போல் வெளியே வந்து என்ன, என்ன என்ற ஒரே வார்த்தையை ஒரே சமயம் அடுக்கடுக்காய்க் கேட்டார்கள். அவர்களைக் கண்டதும் அழுது கொண்டிருந்த எல்லா அலி ஜீவன்களும் அங்கே ஓடி வந்தன. கீழே புரண்டவள்களும், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டவள்களும், தலைவிரி கோலமாக அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் சொல்ல முற்பட்டனர். இதனால் வேகமான சுழலில் நீர் மொள்ள முடியாது என்பதுபோல், வாய்க்குள் இருந்து வார்த்தைகளை எடுக்க முடியாமல், அல்லாடினார்கள். ஒரே ஒருத்தி நீலிமா ‘மாதாஜி இந்திரா மர்கயா... மாதாஜிகோ... பாடிகாட்ஸ்... மார்த்தியா...’ என்று அரற்றினாள். அப்போது எல்லா அலிகளும் மீண்டும் ஒரேயடியாய் அழுதார்கள். சிலர் வளையல்களைத் தலையில் அடித்தே உடைத்தார்கள். நீலிமாதான் சிறிது சமாளித்து ‘ரொக்கே, ரொக்கே’ என்று சொல்லிவிட்டு, கண்ணிரும் கம்பலையுமாய் ஒப்பித்தாள்.
“மாதாஜி. நம்மையெல்லாம் மனுஷஜீவனா மதிச்சு, வீடு கட்டி விளக்கேத்தித் தந்த இந்திராஜியை... அவங்களுக்குக் காவல் காக்கிற போலிஸே சுட்டுக் கொன்னுட்டாங்களாம். அம்மாவை ஆஸ்பத்திரியில பார்த்துட்டு, அலைமோதி வந்தவங்க அழுதுகிட்டே சொல்றாங்க...”
கங்காதேவி, கத்தினாள். அவள் தோரணைக்குப் புறம்பான காட்டுக் கத்தல்.
“இருக்காது. இருக்க முடியாது. எங்கம்மா இந்திராஜி சாகமாட்டாள். அவள்மேல் குண்டு பாய்ந்தாலும், குண்டுதான் சாகும். நம்மோட அம்மா சாகமாட்டாள்.”
கங்காதேவி, ஒப்பாரி போடுகிறவர்களே, அன்னை இந்திரா இறந்துவிட்டதாக தங்கள் ஆசைக்கு ஒரு வெளிப்பாடு செய்கிறார்கள் என்பதுபோல் அவர்களை ஒட்டுமொத்தமாய் கோபத்தோடு பார்த்தாள். ஒரு சிலரை அடிக்கக்கூடக் கையை ஓங்கினாள். ஆனால், யதார்த்தம், அவள் விருப்பத்திற்கு விரோதமாகக் கூத்தாடியது. கோரதாண்டவமிட்டது.
கடைகள் ‘டப்டப்’ பென்று மூடப்பட்டன. ஆங்காங்கே சாலைகளில் ஓடிய பஸ்கள் அப்படி அப்படியே நின்றன. மக்கள் கும்பல் கும்பலாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருசில இடங்களில் மயான அமைதியோடு கூடிய நடை. இன்னும் சில இடங்களில் ‘குய்யோ