முடியலைடி...”
மேகலையால் தாள முடியவில்லை. அம்மாவைக் கட்டிக்கொண்டு “எனக்கும்தான். எனக்கும்தான்” என்று அவள் கழுத்திலேயே வார்த்தைகள் உரசும்படி கையைச் சுற்றி விம்மினாள். ஐந்து நிமிட நேர உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள்...
தாயும் மகளும் அங்கேயே சேலை மாற்றினார்கள். கங்காதேவி தனது பட்டுப்புடவையை மடித்து வைக்கும் மகளைப் பார்த்தபடியே, நைட் கவுன் போட்டுக் கொண்டாள். மகள் கழுத்தில் ஒரு செயினை மட்டும் விட்டுவிட்டு, மீதியை அவளிடம் கொடுத்தாள். மாடத்தில் வைக்கப்பட்ட ஒரு சாவிக்கொத்தை அவளிடம் நீட்டினாள். பிறகு, எதேச்சையாகப் பேசினாள்.
“கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்கோடி... ஒரு மாதம் கழிச்சு ஹார்மோன் ஊசி போட்டால், மார்பகத்துல ‘பேடு’ தேவையே இல்லை... பெரிசாயிடும். வெட்டுப் புண்ணு இப்பதான் ஆறியிருக்கு... இது முடிஞ்சதும் அது மேல நெனவு வரும். அதனாலதான் சொன்னேன்...”
மேகலை “நை மாதாஜி, நை” என்று அவசர அவசரமாய் சொல்லிக்கொண்டே அம்மாவிடம் வந்தாள். உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினாள்.
“வேண்டாம்மா... ஒங்க சொல்லைத் தட்டுறதாய் நினைக்காதீங்க. நான் இப்படியே இருந்துட்டுப் போறேன். ஊசியே தேவையில்ல... பூப்பு நீராட சவுக்குக் கம்புல உட்கார்ந்தது கூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்...”
“உன்னிஷ்டம். ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை, உனக்கும் ஆசாபாசம் உண்டு... ஆம்பளைங்க மேல ஒரு ‘இது’ வரும். அந்த மாதிரி சமயத்தில், அதோ பார்... நான் அடையாளம் காட்டாத மீசைக்காரன்... பத்து வருஷத்துக்கு முன்னால ஒரு வாரத்துக்கு ஒரு தடவை இங்க வருவார்... அப்புறம் மாரடைப்புல செத்துட்டார்... எனக்கும் இப்ப வயசாயிட்டது... அவரோட நினைப்பு கூடிக்கிட்டே இருக்குது. ஆனால் ‘அந்த நெனப்பு’ போயிட்டது...”
“நானும், உங்ககிட்ட எதையும் ஒளிக்க விரும்பலம்மா. எனக்கும், ஒருத்தர் இருக்கார். ஆனால், என் அளவில தான் இருக்கார்... நானும் அவரைக் காதலிக்கேன். அவருக்கு இது தெரியாது. தெரிஞ்சால், ஒருவேளை காறிக்கூடத் துப்புவார்... நானும் அவர்கிட்ட தெரியப்படுத்தப்