முறையோ’ என்ற கூப்பாடோடு ஓடிய மனிதக் காலடிச் சத்தங்கள். கங்காதேவி நிலை குலைந்தாள். நம்ப முடியாதது, நடந்துவிட்டது. அரவான் தன்னைத்தானே காவுக்குச் சம்மதம் கொடுத்ததுபோல், அம்மாவும் தன்னையே காவு கொடுத்து விட்டாள். எல்லாத் தலைவர்களும் மானிடத்தின் மூன்றாவது தரப்பைப் பற்றித் தெரியாமலும், தெரிந்து கொள்ள விரும்பாமலும், அலிகளை அலட்சியப்படுத்தியபோது இந்த அன்னை, அவர்களை அரவணைத்தவள். இன்னும் உயிரோடு இருந்தால், என்னவெல்லாமோ செய்திருப்பாள். செய்தாலும் செய்யாவிட்டாலும், பரவாயில்லை. அவள் உயிரோடு இருந்திருந்தால் அதுவே அவள் செய்தது மாதிரி...
கங்காதேவி, கனத்த சிந்தனையுடன் முர்கே மாதாவை முறைத்துப் பார்த்தாள். பிறகு அந்தத் திட்டில் ஏறி, குடைசாய்ந்து கிடந்தாள். கீழே நின்ற அலிகளோ ‘மாதா மாதா.. எதுக்குமே பிரயோசனப்படாத எங்களை எடுத்துட்டு எங்க அம்மாவைக் கொடுத்துடும்மா’ என்றார்கள். பலர், தத்தம் முகத்தில் மாறிமாறி அடித்துக்கொண்டார்கள். இந்தத் தாக்கத்தில் தன் முகத்திலும் அடிக்கப் போன கங்காதேவியை, மேகலை பிடித்துக் கொண்டாள். நீலிமா பின்னால் வந்து தாங்கிக்கொண்டாள். முர்கே மாதாவிடம், கங்காதேவி தலையை அவலத்தனமாக ஆட்டியபடியே முறையிட்டாள்.
“எம்மா, எம்மா... எத்தனையோ வேலைக்கு மத்தியில் இந்தப் பக்கம் வந்து எங்களை விசாரிக்கிற தாயே... தேர்தலுக்கு முன்னால வராமல் பின்னால் வந்த மாதா... ஒன்னைப் பேடித்தனமாய் கொன்னுட்டாங்களே... முர்கேமாதா, நீ ஒரு மூர்க் மாதா. எங்க அம்மாவோட சாவை தாங்கிக்க சக்தியாவது கொடுடி...”
மேகலையும், கேவிக் கேவி அழுதாள். அன்னை இந்திராவுக்கு ஒரு அழுகையும் அவளுக்காக இப்படி அழும் தாய்க்காக ஒரு அழுகையுமாய் அழுதாள்.
கங்காதேவி எழுந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தபோது அவள் ஒருவர் ஒருவருக்காய்ச் சொல்வது போன்ற உரத்த குரலில் சொன்னாள்.
“வாங்க எல்லோரும் போகலாம். அம்மாவக் கடைசியா பார்ப்போம்!”
கவுனோடு புறப்படப்போன கங்கா தேவியை, நீலிமாவும், லட்சுமியும் வீட்டுக்குள் கொண்டு