அந்தக் கார், சிதம்பரத்தை நோக்கி விரைந்தது. நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்தது. சாலை ஓரமாக இருந்த பல்கலைக் கழகத்தின் பக்கம் அது வந்தபோது, அவள் காரை, நிற்கச் சொன்னாள். சிறிது தூரம் நடந்தாள். கூட நடக்கப்போன திடீர்த் தோழியைக் கையாட்டித் தடுத்தபடியே நடந்தாள். அசைவற்று நின்றாள். தோழிக்காரி போய்த்தான் அவளை உசுப்பி விட்டாள். காருக்குள் ஏறி ‘கோவில் கோவில்’ என்றாள். கோவிலுக்குப் போனதும், கோபுரத்தை, ஒப்புக்கு கும்பிட்டுவிட்டு, காரை வீதி வீதியாய் விடச் சொன்னாள். போர்ட் போர்டாய்ப் பார்த்தாள். டேவிட் அந்தக் காலத்தில் சுட்டிக் காட்டிய செமினார் புகழ் சைக்யாட்ரிஸ்ட் கிடைப்பாரா என்று பார்த்தாள். அங்கே ஒரு பெட்டிக் கடை இருந்தது. அவள் சளைக்கவில்லை. அதே மருந்துக் கடைக்குப் போனாள். டேவிட்டைப் பற்றி நேரடியாய் விசாரித்தபோது, அப்படி ஒருத்தன் இல்லை என்பதும் ‘இப்படிப்பட்ட’ ஒருத்தி, விசாரிக்கிற அளவுக்கு ஒருத்தன் இருந்தால் அவன் பிரிஸ்கிரிப்ஷன்களுக்கு மருந்து கொடுக்கப் போவதில்லை என்பது மாதிரியும் அதே பழைய கடைக்காரர், பழைய சுயம்புவைத் தெரியாமல் பேசினார்.
அந்தக் கார், வெறுமையோடு, கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வந்தது. வழியில் மேகலை தனது வரலாற்றையும், டேவிட் உள்ளிட்ட கதை மாந்தர்களையும் சொன்னாள். கோயிலருகே வந்ததும் இருவரும் கூத்தாண்டவரின் தேரைப் பார்த்து ஓடினார்கள். மேகலை கடல் மண்ணில் ஓட முடியாமல், செருப்பைக் கையில் பிடித்தபடியே ஓடினாள். இருவரும் அந்த மனிதக் கடலில் இரு துளிகளாகி - ஒரு குமுழியாகி மறைந்து போனார்கள்.
மேகலை தேரிலிருக்கும் கூத்தாண்டவரைப் பார்த்தாள். டேவிட்டாகத் தோன்றிய ஒரு உருவத்தை வலுக்கட்டாயமாக விலக்கினாள். தேருக்கு முன்னால் நடக்கும் ‘திருப்போரைப்’ பார்த்தாள். காளி வேஷம் போட்டவரும், அரவான் வேஷம் போட்டவரும், கத்தியும், வாளுமாக, வேலும் வில்லுமாக போரிடுகிறார்கள். துள்ளித் துள்ளித், தள்ளித் தள்ளி, தாம் தூம் என்று குதிக்கிறார்கள். அரவான், காளியின் வாளுக்கு பலியாகாமல், லாகவமாக தலையை வளைக்கிறான். காளியைக்கூட அவன் கொல்ல போவது போன்ற நிலை. உடனே, எல்லா அலிப் பெண்டாட்டிகளும், கொண்டையிலுள்ள பூக்களை எடுத்து, அரவான்மேல் பூப்பூவாய் வீசுகிறார்கள். சபாஷ் போடுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். விநயமாக ஆடுகிறார்கள். அந்தக் காலத்து, ஆகாய அம்புகள் போல், வாணவேடிக்கைகள். இந்தக் காலத்து அணு ஆயுதங்கள் போல் சிவகாசி வெடிகள். அலிகளின் நாட்டியங்கள். உருமி மேளம். உள்ளூர் அலிகளின்