Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 41 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 41
மேகலை வேட்டி சட்டையோடு, சுயம்புவானான்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கருவேலங்காட்டைத் தன்னை விழுங்கப் போவதுபோல் பயந்த அதே சுயம்பு, இப்போது அந்தக் காட்டையே விழுங்கப் போவதுபோல் பார்த்தான். அந்தக்காடு அவனை விழுங்கக்கூடிய வகையிலும் இல்லை. பாதிப் பொட்டல். கருவேல மரங்களின் வம்சாவழிகள் ஆங்காங்கே சிறுபான்மையாகக் கிடந்தன. ஆகாய நிலா பாதியாகி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்தக் காட்டைக் கண்போல் காத்த வாட்ச்மேன் வீரபாண்டியை விட்டு வைத்திருக் கிறார்களோ அல்லது அவனையும் மரமாய் வெட்டி மண்ணில் சாய்த்தார்களோ...
சுயசிந்தனையிலிருந்து வெளிப்பட்ட சுயம்பு, அருகே நின்ற வெள்ளைக் காரில் வெளியே தென்பட்ட வளையல் கைகளைப் பிடித்துக்கொண்டு கீழே குனிந்து ஏதோ சொன்னான். திறக்கப்படப்போன, பின் கதவை இவனே வலுக்கட்டாயமாகச் சாத்திவிட்டு அந்தக் கார் திரும்புவது வரைக்கும் நின்றான். அது ஓடாமல் தயங்கித் தயங்கி நடந்தபோது, இவன் ஓடிப்போய் ஏதோ சொல்ல, அது ஓடத் துவங்கியது.
சுயம்பு பழைய பாதையிலேயே நடந்தான். ஆதி திராவிட குடியிருப்பு வழியாக நடந்து, செருப்பையும் மீறி, காலில் துளைத்த முள்ளை எடுப்பதற்காக நின்றான். அப்போது இருந்த தொகுப்பு வீடுகளே இப்போது மக்கடித்துக் கிடந்தன. ஆனால் அந்தப் புளியமரக் குடிசைகள் பெருகியிருப்பதுபோல் தோன்றின. சுயம்பு அங்கிருந்து தாவி, அதே மணல்வாரி ஓடை வழியாகப் போய், மேற்குப் பக்கமாய்ச் சுற்றி வளைத்தே நடந்தான்.
முன்பு மாதிரி பயந்தல்ல. மனதின் நினைவுகளை அசைபோட்டுப் பார்ப்பதற்கு, நடந்தவழியே நல்லதாகப் பட்டது. அதோடு, வீட்டில் என்ன நிலமையோ என்ற பயம். அதை எதிர்கொள்ள ஒரு தயக்கம்.
சுயம்பு இப்போது வேகித்து நடந்தான். ஆங்காங்கே தோன்றிய புதுப் பணக்கார வீடுகளை பட்டும் படாமலும் பார்த்தபடியே நடந்தான். குடும்பத்துக்கு ஏற்கெனவே ஏற்பட்ட அதிர்ச்சியை,