மாதிரி ஆகாமல் பெரிய என்ஜினியரா மாறனும், அதுக்கு நான் இருக்கேன். மோகனாவுக்கு மாப்பிள்ள தேடலியா அண்ணாச்சி...”
“எந்த எடமும் குதிரமாட்டேங்குடா... வயசு வேற ஆயிட்டது. நீ போன துக்கத்துல அவளும் ஒரு வருஷம் பித்துப் பிடிச்சு எதையோ பறிகொடுத்தவள் மாதிரி இருந்தாள். அப்புறம் சரியாயிட்டாள். ஒரு முப்பது வயசு மாப்பிள்ள இருக்கு... நல்ல உத்தியோகம். ஐம்பதாயிரம் ‘சுருள்’ கேக்காங்க. அந்த ரொக்கத்தைக் கொடுத்துட்டா போதும். அக்காளுக்குச் செய்த நகை இருக்கு. வயல் விக்கலாம்னா இந்த வீட்டக் கெடுக்கணும்னே வந்தவள் விடமாட்டேங்கா...”
“நீயே சொல்லு சுயம்பு... வயல வித்துட்டு எம் பிள்ள தெருவில நிக்கணுமா... ஒருத்தர் வாழறதுக்கு ரெண்டு பேரைக் காவு கொடுக்கணுமா...”
“பொறுங்க அண்ணி. அப்பாவ... ஏண்ணா இப்படி கவனிக்காம விட்டுட்டே...”
“வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து உண்டா. சோறு போடும்போதெல்லாம் ‘என் மகன் சுயம்பு சாப்பிட்டானோ இல்லையோ’ன்னு சாப்பாட்டுத் தட்டை எடுத்து வீசுவாரு... அரைப்பட்டினி. முக்கால்பட்டினி, இதனாலய டி.பி. வந்துட்டு. வில்லாததையெல்லாம் வித்துப் பாத்துட்டேன். மருந்தே வேண்டாம்னு சொல்றாரு... நீ வந்துட்ட இல்ல... இனிம சரியாயிடும். ஏதாவது சாப்புடுடா. இந்த வீட்ல எவளும் கேட்கமாட்டாளே...”
கோமளம், சமையலறைக்குள் போனபோது, சுயம்பு, “நில்லுங்க அண்ணி, இவ்வளவு நடந்த பிறகும் என் வயித்துல எதுவும் இறங்குமா...” என்றான். பிறகு சிறிது இடைவெளி கொடுத்துப் பேசினான்.
“நாளைக்கு டவுன்ல... ஒன் பேரு என்னடா... மோகனா... சட்டுனு ஞாபகம் வரல... நாளைக்கு நீ என் கூட கோணச்சத்திரத்துக்கு வா... ஒன்பேர்ல பாங்க்ல ஒரு அக்கவுண்ட் போடணும். ‘கோல்ட்’ கார்டு வச்சிருக்கேன்... உன்பேர்ல ஐம்பதாயிரம் ரூபாய் கட்டிடுறேன்... அந்த வட்டியில நீ படிக்கணும். மற்ற செலவுக்கு நான் மாதா மாதம் அனுப்புறேன். நீ என் கண்ணு முன்னாலய என்ஜினியராகணும்... அப்புறம் அண்ணாச்சி அப்பாவ நாளைக்கே டவுன்ல ஆஸ்பத்திரியில சேர்க்கணும்... எவ்வளவு செலவானாலும் சரி... மோகனா கலியாணத்துக்கு எவ்வளவு கேட்டாலும் சரின்னு சொல்லுங்க... டெல்லிக்குப் போனதும் பணம் அனுப்பி