உடன்பிறப்பே, பத்தாண்டுக்குப் பிறகு பழையபடி கிடைச்ச என் செல்வமே. ஒன்னை விட மாட்டேண்டா. இனிமேல் விடவே மாட்டேண்டா...”
முட்டி மோதி அழுத அண்ணனுக்கு, அவனே ஆறுதல் சொல்ல வேண்டியதாயிற்று. இப்போதுதான் அவன் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்ற ஒரு எண்ணம் உள்ளோடியது. அந்த அளவிற்கு அண்ணன் அழுதழுது அவனை அழச் செய்யாத நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டான். சுயம்பு தட்டுத் தடுமாறிக் கேட்டான். கேட்கும்போதே அழுகை.
“வீட்ல... வீட்ல... எல்லாரும்...”
“வாடா... உள்ள வந்து நீயே பாருடா, யாரும் சாகலை.”
“அக்கா... அவளோட கலியாணம்.”
“அவள் மட்டும் நல்லபடியாய் போயிட்டாள். நிம்மதியாய் இருக்காள்.”
அந்த வாசலில், அன்று போல் இன்று வேறு எவரும் வெளிப்படவில்லை. சுயம்புவுக்கு, அதுவே வேர்த்துக் கொட்ட வைத்தது. அண்ணனை ஆதரவாகப் பிடித்தபடியே வாசலைத் தாண்டி உள்ளே போனான். அந்த இரண்டு பத்தி வீட்டின் திண்ணையில் நார் நாராய் ஒரு உருவம். கட்டிலில் கிடந்தாலும் கட்டில்தான் தெரிந்ததே தவிர, அந்த உருவம் தெரியவில்லை. அதற்கு எதிர்ப்புறம் பாயில் ஒரு உருவம். ஊற வைத்த சேலைபோல், ஒடுங்கிக் கிடந்தது.
ஆறுமுகப்பாண்டி, மின்விளக்கைப் போட்டான். கட்டிலின் அருகே போய் ‘எப்பா எழுந்திரிங்க... யாரு வந்திருக்கான்னு பாரும்’ என்றான். அதே சத்தத்தில், ‘எம்மா உன்னையுந்தான்’ என்றான். ஆனாலும் அந்த உருவங்கள் அசையவில்லை. பக்கத்துக்கு ஒன்றாக உள்ள இரண்டு அறைக் கதவுகள்தான் திறந்தன. ஒன்றில் மோகனா வெளிப்பட்டாள். இன்னொன்றில் கோமளம். தோள்வரை வளர்ந்த ஒரு பாவாடை தாவணி ஜாக்கெட் பெண்ணைக் காட்டி நின்றாள். அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
சுயம்பு அவர்களைப் பார்க்காமல் நார்க்கட்டிலின் பக்கம் குனிந்தான். அப்பாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டான். இதற்குள் தட்டுத்தடுமாறி வந்த அம்மாவின் கழுத்தைத் தோளோடு