யாருக்கோ நடந்ததுபோல் பேசப்போகிறார். முடியவில்லை. இறுதியில் குரலே குற்றுயிராக, வார்த்தைகள் கொலைபட்டு, கொலைபட்டு சுயம்புவிற்கு கொலைவாளாகும்படிச் சொல்கிறார்.
“நீ போன ஒரு வருஷத்துக்குள்ளேயே தூக்குப் போட்டுச் செத்துட்டாடா! செத்து முடிஞ்சு சிவலோகம் போயிட்டாடா... தம்பி... தம்பி... ஏண்டா பேசமாட்டேங்க... தம்பி... தம்பி... பேசுடா... பேசுடா... ஏடா பெரியவன், சித்தப்பா, நெஞ்சத் தடவி விடுடா. சுக்கை எடுடா... சீக்கிரமா கொண்டு வாடா..."
சுயம்பு குப்புறக் கிடக்கிறான். மூச்சு முட்டித் தவிக்கிறான். கால்கள் அங்குமிங்குமாய் ஆடின. பிள்ளையார் மகனிடம் வர அல்லாடுகிறார். வெள்ளையம்மா மகன் பக்கம் தவழ்கிறாள். கோமளம் ஒரு சுக்கை எடுத்து தரையில் போட்டு ஒரே கையால் குத்திச் சுக்கல் சுக்கலாக்கி மைத்துனனின் தலையை நிமிர்த்தி வாய்க்குள். கொண்டு போகிறாள். மகன் கொண்டுவந்த தண்ணtரை அவன் வாய்க்குள் ஊற்றுகிறான். ஆறுமுகப்பாண்டி தம்பியை மடியில் கிடத்துகிறார். கட்டிலில் துடிக்கும் அப்பாவைப் பார்த்து அபயம் கொடுக்கும் முருகன் கையைப் போல ஆக்கிக் காட்டுகிறார். மோகனா கொண்டுவந்த இன்னொரு செம்புத் தண்ணிரை எடுத்துத் தம்பியின் முகத்தில் அடிக்கிறார். அவன் லேசாய்க் கண் விழித்தபோது, தம்பியை அம்மாவின் மடியில் போட்டுவிட்டு உள்ளே ஓடுகிறார்.
அவர் ஓடிய அறைக்குள் தட்டுமுட்டுச் சாமான்கள் கீழே விழும் சத்தம் கேட்கிறது. பூனை பயந்து போய் ‘மியாவ்’ போடுகிறது. அடைகாக்கும் கோழி கூக்குரலிடுகிறது. பத்து நிமிடம் கழித்து வெளியே இருப்பவர்கள், அவரும், மரகதமாய் ஆகப்போகிறாரோ என்று பயந்து உள்ளே போகப் போனபோது, ஆறுமுகப்பாண்டி கையில் ஒரு கசங்கிய தாளோடு வெளியே வந்தார். இதற்குள் அம்மாவின் மடியிலேயே தலையை உருட்டிக்கொண்டிருந்த சுயம்பு மெல்ல எழுந்தான். அண்ணன் அந்தத் தாளை, அவனிடம் நீட்டினார். பிறகு முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டு கேவினார்.
சுயம்பு, அந்தக் காகிதத்தை உற்று உற்றுப் பார்த்தான். எட்டாம் கிளாஸ் எழுத்து... அக்காவின் அதே கையெழுத்து.
“தம்பி... என் ஆசைத் தம்பியே...