சேர்த்துப் போட்டுக்கொண்டே ‘எப்பா... எப்பா... நீங்க பெத்த பிள்ள வந்திருக்கேம்பா, ஒங்க பிள்ளைப்பா’ என்று அழுதான்.
ஆயிரம் ஆயிரம் ஒலி பெருக்கிச் சத்தங்களாலும், மாடுகளின் கத்தலாலும் கோழிகளின் கூவலாலும் தெருச் சண்டைகளின் ஓலங்களாலும் எழுப்ப முடியாத அந்த உருவம், இந்தச் சின்னச் சத்தத்தைக் கேட்டுக் கண்ணைத் திறந்தது. அந்தக் கம்பீரமான முகம், இப்போது பட்டுக் கிடந்தது. வாய் கண்போல் சிறுத்தும், கண்கள் வாய் போல் பெருத்தும் குழிகளாக - பள்ளங்களாகிக் கிடந்தன. ஆனாலும், அந்த உருவத்திற்குள் ஒரு வேகம். உத்திரச் சட்டம் மாதிரியான கைகள் இப்போது ஒரு விரல் தடியில் கிடந்தன. ஆனாலும் அது சுயம்புவின் தோளைப் பற்றுகிறது. அவன் தலையில் போட்டுக்கொள்கிறது. அவன், அதற்குள், அந்த உருவத்தைத் தூக்கி நிறுத்தி மார்போடு அணைக்கிறான். அந்த உருவம் அவனை நரம்புக் கயிறாய் இழுக்கிறது. ‘என் செல்வமே, என் செல்வமே’ என்று புலம்புகிறது. மேற்கொண்டு பேசமுடியாமல் தலையை ஆட்டுகிறது. உடனே ஆறுமுகப்பாண்டி வந்து அப்பாவைச் சுவரோடுச் சாத்துகிறான். ஆனாலும், அவனை மீறி அந்த உருவத்தின் முகம் சுயம்புவின் முன் கவிழ்கிறது. உமிழ்நீரால் ஒரு முத்தம். கண்ணிரால் மறு முத்தம். இடையிடையே அழுகை ஒலி, அதைத் தடுக்கும் இருமல்கள்.
சுயம்பு தன் பிடரியில் இன்னொரு முத்தம் கிடைப்பதைப் பார்த்து அப்போதுதான் அம்மாவை உன்னிப்பாய் பார்க்கிறான். அவனால் அலட்சியப் படுத்தப்பட்ட அவன் அம்மா... மதர்ப்போடும் வீராங்கனை போலவும் இருந்த அம்மா, குறுகிப் போயிருக்கிறாள். ஆனாலும் இப்போது அவனை முன்னிலும் அதிகமாய் இறுகப் பற்றுகிறாள். அவன் எலும்புகள் நொறுங்கப் போவதுபோல் இழுத்துப் பிடிக்கிறாள். அவன் கையை எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொள்கிறாள். அவன் முதுகில் முகத்தைப் புரட்டுகிறாள். ஈன முனங்கலாய் முனங்குகிறாள். ‘ராசா... ராசா... பாத்தியாடா ஒன் அப்பாவோட கோலத்தை, அண்ணனோட அவலத்தை' என்று மேற்கொண்டு பேசப் போனவளை ஆறுமுகப்பாண்டி ஒரு அதட்டலோடு பார்க்கிறான். அவளைத் தோளோடு தோளாய் சேர்த்துப் பிடித்து அதான் வந்துட்டானே. ராமர்கூட பதினாலு வருஷம் வனவாசம் போகலியா? இதுக்குமேல நாம் அழுதா... அவன் இங்க வந்ததுல் நமக்கு இஷ்டமில்லன்னு அர்த்தம்’ என்று சொல்லிவிட்டு, அம்மாவைத் தரையில் உட்கார வைத்து, வன்னிமரத் தூணில் சாய வைத்தார்.
கோமளம், சுயம்பு தன் பக்கமாயும் முகம் காட்டி ஒரு அழுகை அழவேண்டும் என்பதுபோல்