குலைச்சலிலேயே தெரிந்தது. அவன் அதன் தலையை வருடிவிட்டபோது அந்த அந்திம நாய், குலைப்பதைக்கூட நிறுத்தியது.
திடீரென்று முன்வாசல் திறக்கப்படுகிறது. அதில் ஒடுங்கிப்போன ஒரு உருவம். யார் இது... அன்று போல் அக்காவா. இல்லை. அண்ணன். கூடப்பிறந்த அண்ணன்... அய்யோ... இது என்ன கோலம்... கமலைக்கல் மாதிரி இருந்த அண்ணன்... இப்படி ஏன் உருவிழந்து போய்விட்டான். சட்டைக் கம்பு மாதிரி வீரியப்பட்ட அவன் கைகளும் கால்களும் இப்படி ஏன் முருங்கைக் கம்பாய் ஆயின...
ஆறுமுகப் பாண்டி தம்பியையே பார்த்தான். கையோ காலோ வெட்டுப்படும்போது, சில விநாடிகள் வலியோ, ரத்தமோ தெரியாமல் வெள்ளையாய்த் தெரியுமே, அப்படிப்பட்ட உணர்வற்ற பார்வை. அப்புறம் அதில் பீறிடும் ரத்தம் போன்ற வேகம். பிராணனைப் பிய்த்தெறியும் வலி. பாசவலி,
அண்ணன், பாட்டரி லைட்டை தூக்கி எறிந்துவிட்டு, தம்பியின் பக்கம் ஓடினான். தம்பி சூட்கேஸைத் தூக்கிப் போட்டுவிட்டு, அண்ணனை நோக்கி ஓடினான். இருவரும் மோதிக்கொண்டார்கள். முட்டிக்கொண்டார்கள். இருவருக்கும் இடையே எந்த சப்தமும் வரவில்லை. ஒட்டிக்கொண்டவர்களைப் பிரிக்க முடியாது என்பது போன்ற நெருக்கம். இடைவெளியே இல்லாத அணைப்பு. காற்றுக்கூட உட்புக முடியாத பாசத் தழுவல், அண்ணன், தம்பியை நிமிர்த்துகிறான். பிறகு அப்படியே அழுது அவன் தலையில் முகம் போட்டு மருவுகிறான். தம்பி, அண்ணனை நிமிர்ந்து பார்க்க முயற்சிக்கிறான். அந்த முயற்சி தோற்று கண்கள் அண்ணனின் மார்பை நனைக்கின்றன. அண்ணன் தம்பிமேல் போட்ட பிடியை விடாமலே புலம்புகிறான்.
“தம்பி... எங்கள மறந்துட்டியேடா! ஒன்ன எங்கெல்லாமோ தேடினோம்! யாரை மறந்தாலும், இந்த அண்ணனை மறக்கலாமாடா... மறக்கக்கூடிய அண்ணனாடா நான்... என் உடன்பிறப்பே, ஒன் அண்ணி கேட்ட ஒரு சொல்லாலேயே நான் இன்னும் தவிச்சுக்கிட்டிருக்கேன்... ஒரு கோடி சொல்லாலயும் விளக்க முடியாத ஒன் நிலமைய நெனைச்சு எப்படிப் புலம்பறியோ... எங்கெல்லாம் சுத்துனியோ? ஒனக்கு நாங்க செய்த கொடுமையை மறந்துடுடா. அதுக்கு கடவுள் நல்லாவே கூலி கொடுத்துட்டார்டா... அன்றைக்கு என் காலடியிலேயே இருப்பேன்னு சொன்னியே! அப்படிச் சொன்ன என் ஆசத் தம்பியை காலால உதறிட்டேனே, தம்பி... என்