வெள்ளையம்மாள் இப்போது மெலிந்த குரலில் ஒரு விவரம் சொன்னாள்.
“எப்பா சுயம்பு... ஒங்க அண்ணனும்... மயினியும் நீ போன நாளுல இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுறது இல்லப்பா. அவங்களுக்குள்ள என்ன நடந்துதோ,. ஏது நடந்துதோ. சண்டையுமில்ல. சமாதானமுமில்ல. நேருக்கு நேரா பார்க்கிறதும் இல்ல. நீயாவது புத்தி சொல்லி...”
கோமளம் அப்படியே உட்கார்ந்து முகத்தைக் கைகளில் மறைத்துக்கொண்டு விம்மினாள். சுயம்புவுக்கோ அக்காவின் தாக்கம் இன்னும் போகவில்லை. ஆனாலும் அண்ணனைக் கேள்வியாய்ப் பார்த்தான். ஆறுமுகப் பாண்டி சலிப்போடு சொன்னார்.
“சாகும்போது, சங்கரா, சங்கரான்னு சொல்லி என்னடா பிரயோசனம்... ஒடம்புல போட்ட சூட்டை மறந்துடலாம்... ஆனா மனசுல போட்ட சூடு... அந்த சூடு இன்னும் எரிச்சுக்கிட்டுத்தான் இருக்கும்... காதுல ஈட்டி மாதிரி குத்துது... நான் செத்தபிறகு என் நெஞ்சு வெந்தாலும் வேகும். அந்த சொல்லு வேகாதுடா... சரி சரி... இப்போ எதுக்கு அந்தப் பேச்சு... பிள்ளிய தலையெடுத்துட்டால், அதுவே போதும். நம்ம தங்கச்சிய கரையேத்திட்டால், அந்த சந்தோஷம் ஒண்ணே போதும்...”
ஆறுமுகப்பாண்டி பேசி முடித்ததும், கால் மணி நேரம் கொடுர மெளனம். பிள்ளையாரின் இருமலையும் வெள்ளையம்மாவின் தும்மலையும் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை.
சுயம்பு அண்ணன் மகனையே நோட்டமிட்டு அவனுக்காகவே மெளனம் கலைத்தான்.
“நீ என்ன ராசா படிக்கே...”
“பிளஸ் டு முடிச்சுட்டேன் சித்தப்பா. ஒங்கள மாதிரியே நல்ல மார்க் வாங்கியிருக்கேன்... இடம் கெடச்சிட்டு. ஒங்கள மாதிரியே மெரிட்ல கிடைச்சது. பணம் கட்ட முடியல. கட்டுறதுக்கும் வசதி இல்ல. ஒங்கள மாதிரியே...”
“என்ன மாதிரியேன்னு சொன்னே பிச்சுடுவேன் படுவா... நீ நல்லா இருக்கணும்... என்னை