டேப்புகள். வெளியூர் நீலிமாவின் டோலக். ஒரே சங்கீதக் கூச்சல், அரவானுக்கு வக்காலத்து. காளிக்கும் - காளியாடிக்கும் திட்டுக்கள்.
அரவான் சாமியாடி வலுவானவர். ஆனாலும் புராணத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தலையை நீட்டுகிறார். ஒரு ‘பாவலா’ அரிவாள் வெட்டு. அப்படியே தரையில் சாய்கிறார். சாராய வாய் கோணுகிறது. அந்தச் சமயத்தில் தேரிலிருந்த அரவான் தலை வெட்டப்படுகிறது. அத்தனை அலிகளும் - அழுது புலம்புகிறார்கள். புருஷனின் தலை துண்டாகி விட்டதைக் கண்டு, உடம்பே துண்டாப் போவதுபோல், மாரடிக்கிறார்கள். கைகளை ஒன்றோடு ஒன்று உரசி வளையல்களை உடைத்துக் கொள்கிறார்கள். கொண்டை விரித்து, மலர்ச்சரங்களைப் பிய்த்துப் பிய்த்துக் கசக்கி எரிகிறார்கள். சிலர் ஒருவர் கழுத்தை ஒருவர் பிடித்து அழுகிறார்கள். சொந்தப் புருஷனைப் பறிகொடுத்த ஒரு பத்தினிகூட இப்படி அழமாட்டாள். கணவன் போனதால் அனைத்தும் போன ஒரு திக்கற்ற பெண்கூட இப்படி புலம்பமாட்டாள். ஒப்புக்கான ஒப்பாரியில்லை. உப்பில்லாப் பண்டமாய்ப் போனதற்கான அழுகை. உடம்பில் பட்ட சூடுகளையும், மனத்தில் பட்ட இழிவுகளையும் நினைத்து நினைத்து ஆற்றாமையில் அழும் அழுகை. கூட்டம் கூட்டமாய் நின்றாலும், தனிமைப்பட்டது போன்ற தாங்கொண்ணாத் துயரத்தில் அழுகிறார்கள். பொட்டழித்துப் பூவழித்து தன்னை அழித்துக்கொள்வது போன்ற தலையடிகள்... மாரடைப்பு வருவது போன்ற மாரடிப்புக்கள்...
அந்தத் தேர் உருக்குலைந்த அரவானோடு பகல் பதினொருமணி அளவில், ‘பந்தலடிப்’ பக்கம் போகிறது. அங்கே ஒரு கம்பம். அந்தக் கம்பத்தின் கம்பம்போல் எந்தவித சலனமும் இல்லாமல் ஒரு பூசாரி நிற்கிறார். ஒவ்வொரு அலியும் அவர் முன்னால் போய் நிற்கிறது. அந்த நிச மனிதர் இந்த பொய்ப் பெண்களின் தாலிகளை அறுத்து எறிகிறார். கொஞ்ச நஞ்சமுள்ள பூக்களையும் பறிக்கிறார். மிச்ச மீதியான பொட்டுக்களை வேர்வைக் கையால் அழித்துவிடுகிறார். மஞ்சள் துண்டு பறிகொடுத்த ஒரு இருபது வயதுக்காரி கம்பத்தின் பக்கம் போனாள். கூரைப் புடவைக்காரி அந்தக் கம்பத்திலேயே தலையை முட்டி முட்டி ஒப்பாரி வைத்தாள்.
“காகிதப் பூவுன்னு கண்மூடிப்
போனீரோ - என்ராசாவே