வாடாமல்லின்னு பேசாமல்
போனீரோ... நானும்
அப்பனுக்கு வேப்பங்காய்,
அண்ணனுக்கு எட்டிக்காய்.
ஊருக்கு திருஷ்டிக்காய்,
ஒனக்குக்கூட ஊமத்தங்காய்.”
அதுவரை அந்த நிகழ்ச்சிகளை ஒப்புக்கென்று நினைத்து சோகத்தோடும் கம்பீரம் கலையாமலும் நடந்த மேகலை, பூசாரி தாலியைப் பிடிக்கும்போது கையிலேயே மஞ்சள் துண்டைப் பொத்திக்கொண்டு சத்தம் போட்டே டேவிட், டேவிட் என்றாள். எவளோ ஒருத்தி, இவள் கைவிரல்களைப் பலவந்தமாகப் பிரித்து, மஞ்சள் கயிற்றைத் தூக்கிக் காட்டியபோது, அரிவாள் அதைத் துண்டு படுத்தியது. மேகலை, வெறிபிடித்தவளாய் எழுந்தாள். பக்கத்தில் கம்பத்தைப் பிடித்து கட்டியழுத கூரைப் புடவைக்காரியை இவளும் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவளை அறியாமலே ஓலமிட்டாள். தாளநயத்தோடு ஒப்பாரி போட்டாள். பாடல்கள் அவளைத் தேடிவந்தன.
“செடியாய் முளைச்சிருந்தால்...
பூவாய் மலர்ந்திருப்பேன்.
கொடியாய் வளர்ந்திருந்தால்...
கொம்புலே படர்ந்திருப்பேன்.
நதியாய்ப் பிறந்திருந்தால்...