ஓம் சாந்தி : ஆப சாந்தி : அந்தரிக்ஷம் சாந்தி :
வனஸ்பதய சாந்தி : சாந்தி : சாந்தி...
அலைகள் அடங்கி, அடங்கி, அடங்கி, அடங்கி...
அந்த சாந்தி, அமைதியை, இந்த இரு கிளிகள் மூக்கில் வைத்துக் கொண்டிருக்கும் காட்சியினால் கொண்டு வர முடியவில்லை. இரண்டு கிளிகள் ஜோடி - ஆணும் பெண்ணும் தானா?
"கமலம்மா! அமைதிக்குப் புறாவை அல்லவோ பறக்க விடுகிறார்கள்? நீங்கள் கிளியைப் போட்டீர்களே?"
"புறாவுக்குப் பளிச்சென்று பச்சை வண்ண உடம்பும் சிவப்பு மூக்கும் கொடுக்க முடியுமாம்மா? பூ நூல் வேலைக்குப் பூக்களும் கிளிகளும் தான் அழகாக எடுப்பாக இருக்கும். வானமும் கடலும் நாரைகளும் ஓவியம் தீட்ட நன்றாக இருக்காமலா இருக்கும்" என்று மொழிகிறார் கமலம்மா.
அமைதியையும் விடுதலையையும் ஆனந்தத்தையும் புறாக்களைப் பறக்க விடுவதன் மூலம், ஒரு அடையாளம் போல் (Symbolic) மெய்ப்பிக்கின்றனர். கூட்டில் அடைத்த கிளியைப் பறக்க விடக் கூடாதா?
"ஏன் கூட்டில் அடைத்த கிளியைப் பறக்க விடுவதில்லை கமலம்மா?" கமலம்மா நெற்றிச் சுருக்கங்கள் ஆழமாகக்கீற்றிட யோசனை செய்கிறார். அவர் உண்மையில் யோசனை செய்கிறாரா? இல்லை அவளையே பார்க்கிறாரா?
"ஏன் கமலம்மா?"
"எனக்குத் தெரியலியேம்மா?"